கேரளாவை மிரட்டும் வெறி நாய்கள்...21 பேர் பலி...பாதுகாப்புக்கு துப்பாக்கியை தூக்கிய பொதுமக்கள்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் நடப்பாண்டில் மட்டும் வெறிநாய் கடியால் சுமார் 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து நாய்களை கட்டுப்படுத்த கேரள அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும் நாய்களின் அச்சுறுத்தல் தொடர்ந்து அதிகரித்துள்ள நிலையில், இதற்கு எதிராக சிலர் ஆயுதம் ஏந்தியுள்ளனர்.
வெறி நாய்களுக்கு எதிராக ஒருவர் துப்பாக்கியுடன் வலம் வரும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சிறுவர்களுக்கு பாதுகாப்பளிக்கவே இவ்வாறு சென்றதாக அந்த துப்பாக்கி ஏந்திய நபர் கூறியுள்ளார்.

21 பேர் பலி
திரைப்படங்களிலும், கதைகளிலும் வருவதைப்போலவே நாய்கள் மனிதனிடம் இயல்பாக பழகி வந்தாலும் அதை முறையாக பராமரிக்காத பட்சத்தில் அது மனித உயிருக்கே அச்சுறுத்தலாக போய் முடிந்துவிடும். இதற்கான உதாரணம் கடந்த சில நாட்களாக கேரளாவில் அரங்கேறி வரும் சம்பவங்கள். இந்த ஆண்டு மட்டும் கேரளாவில் சுமார் 21 பேர் வெறிநாய் கடியால் உயிரிழந்துள்ளனர். இது மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி உட்பட
இதில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட 5 பேரும் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து நாய்க்கடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் பாலக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் வெறிநாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து 12 வயது சிறுமியை நாய் கடித்துள்ளது.

நீதிமன்றம்
சிறுமிக்கு உடனடியாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இது மூன்று டோஸ்களாக செலுத்தப்பட்டது. ஆனால் சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். ஆக இப்படியாக 21 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதனையடுத்து அம்மாநில உயர்நீதிமன்றம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டது. அதாவது தெருநாய்களுக்கு உணவு அளிப்போர்தான் அந்நாய்க்கு பொறுப்பு. அது யாரைக் கடித்தாலும் அதற்கும் அவர்கள்தான் பொறுப்பு என்று கூறியது.

துப்பாக்கியுடன் வலம்
இதனையடுத்து தற்போது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. வீடியோவில் சிறுவர்களுக்கு பாதுகாப்புக்காக ஒருவர் துப்பாக்கியுடன் செல்வது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து சிறுவர்களை நாய்கள் தாக்கி வருவதால் அதிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கவே இவ்வாறு துப்பாக்கி ஏந்தியுள்ளதாகவும், அதுபோன்ற அச்சுறுத்தல் ஏதேனும் ஏற்பட்டால் நாய்களை சுட்டு தள்ளவும் தயங்கமாட்டேன் என்றும் துப்பாக்கி ஏந்தி நபர் வீடியோவில் பேசியுள்ளார்.
அதிகரிக்கும் வெறிநாய்கடி சம்பங்களை கட்டுப்படுத்த கேரள அரசு 152 மையங்களை அமைத்து, கருத்தடை மற்றும் வீட்டி வளர்க்கும் நாய்களுக்கு லைசென்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது.












Click it and Unblock the Notifications