நள்ளிரவு.. நடுக்காட்டில்.. ரோட்டில் தவழ்ந்து தத்தளித்த குழந்தை.. ஓடும் ஜீப்பிலிருந்து விழுந்த கொடுமை
ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது
Recommended Video
திருவனந்தபுரம்: நள்ளிரவு.. நடுக்காட்டில்.. ஜீப்பில் இருந்து தவறி விழுந்த ஒன்றரை வயது குழந்தை ஒன்று ரோட்டில் அழுதவாறே தவழ்ந்து செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
மூணாறு அருகே கம்பிளி கண்டம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவரது ஒன்றரை வயது பெண் குழந்தை கோகிலா. போன ஞாயிற்றுக்கிழமை, கோகிலாவுக்கு மொட்டை அடிப்பதற்காக பழனி தண்டாயுதபாணி கோயிலுக்கு குடும்பத்துடன் ஜீப்பில் சென்றிருக்கிறார்.
முடி காணிக்கை செலுத்தி முடித்துவிட்டு, ஜீப்பில் எல்லோரும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். ஜீப்பின் பின்பக்க சீட்டில் குழந்தையை வைத்து கொண்டு தாய் உட்கார்ந்திருந்தார்.

தூக்கம்
ஊருக்கு போய்வந்த அசதியில் அப்படியே தூங்கிவிட்டார். ராத்திரி நேரம் 10 மணி இருக்கும். ராஜமலை 5 மைல் பாலத்தில் ஜீப் சென்று கொண்டிருந்தது. அப்போது, அம்மாவின் மடியில் இருந்த கோகிலா கீழே தவறி விழுந்துவிட்டாள். தூங்கி கொண்டிருந்த தாயும், குழந்தை விழுந்ததை கவனிக்கவில்லை, ஜீப் ஓட்டிக் கொண்டிருந்த சதீஷும் குழந்தையை கவனிக்கவில்லை.

சிசிடிவி காமிரா
கீழே விழுந்த குழந்தை, ரோட்டிலேயே தவழ்ந்து செல்கிறாள்.. நடுக்காட்டில், நடு இரவில் குழந்தை சாலையில் விழுந்து தவழ்ந்து செல்வது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

விலங்குகள்
குழந்தை தவறி விழுந்த பகுதி மிகவும் ஆபத்தான இடமாம். சுற்றுலாத்தளம் என்றாலும், ராஜமலை பகுதியில், வன விலங்குகள் நிறைய நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த வனவிலங்குகளை வேட்டையாட பலர் திருட்டுத்தனமாக இந்த பகுதிக்கு வந்து செல்கிறார்களாம். அதனால்தான் சிசிடிவி காமிரா இங்கு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கேமிராவில்தான் குழந்தை தவழ்ந்து செல்வதை வனத்துறை ஊழியர் கவனித்துள்ளனர்.

காயம்
ஏதோ ஊர்ந்து, தவழ்ந்து போகிறதே என்று பார்த்ததில், அது குழந்தை கோகிலா என்று பின்னர்தான் தெரியவந்தது. இதையடுத்து, உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தையும் மீட்கப்பட்டது. கோகிலாவுக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டிருந்ததால், உடனே பக்கத்தில் இருந்த ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சையும் தரப்பட்டுள்ளது.

புகார்
இதனிடையே, சதீஷூக்கும், அவரது மனைவிக்கும் 50 கிமீ தூரத்தில் உள்ள தங்களது வீட்டுக்கு வந்து சேர்ந்த பிறகுதான் குழந்தையை காணவில்லை என்பதே தெரிந்திருக்கிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வெல்லத்தூவல் போலீசில் புகார் தந்தனர்.

பதற வைக்கும் காட்சி
இந்த சமயத்தில், ராஜமலாவில் குழந்தை கண்டெடுக்கப்பட்ட விஷயம் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, குழந்தை கோகிலா மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். ஆனால் மிருகங்கள் நிறைந்த நடுக்காட்டில், நள்ளிரவில்.. குழந்தை கோகிலா தவழ்ந்து செல்லும் வீடியோ காட்சி காண்போரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.












Click it and Unblock the Notifications