லிப்ஸ்டிக், மல்லிப்பூ.. "பேரழகியாக" மாறிய ஆண்கள்.. அசரடித்த கொல்லம் கோயில் திருவிழா.. காரணம் இதுதான்
திருவனந்தபுரம்: கேரளாவில் ஆண்டு தோறும் நடைபெறும் 'சமயவிளக்கு' திருவிழா தனிச்சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த திருவிழா தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்தியாவில் பல வித்தியாசமான திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப இந்த திருவிழாக்கள் மாறுபடுகின்றன. சில இடங்களில் மாதவிடாய் தீட்டாக பார்க்கப்படும். ஆனால் அசாம் மாநிலத்தின் காமாக்யா கோயிலில் இது புனிதமாக பார்க்கப்படுகிறது. அந்த வரிசையில் கேரளாவின் கொல்லம் பகுதியில் கொண்டாடப்படும் திருவிழா ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
காரணம் இந்த திருவிழாவில் பங்கேற்கும் ஆண்கள் அனைவரும் பெண்கள் போல உடையணிந்து, முடிவைத்து பூ சூடி திருவிழாவில் கடவுளை வழிப்படுகின்றனர். இதில் பங்கேற்க வயது பேதமில்லை. இந்த திருவிழாவை மக்கள் கொண்டாடும் முறை எப்படி வித்தியாசமாக இருக்கிறதோ. அதேபோல இதனை கொண்டாட காரணமான முறையும் மிகவும் வித்தியாசமானதாகும். அதாவது இந்த பகுதியில் இருந்த பழங்குடியின மக்களின் குழந்தைகள் ஒருநாள் விளையாடிக்கொண்டிருந்தபோது தேங்காய் ஒன்று கிடைத்திருக்கிறது.

பெண் பூசாரி
இதனை அருகில் இருந்த கல்லில் உடைத்துள்ளனர். அப்போது அந்த கல்லிலிருந்து ரத்தம் வழிந்திருக்கிறது. இதை பார்த்த சிறுவர்கள் தங்கள் பூசாரியிடம் சம்பவம் குறித்து கூறியுள்ளனர். கல்லை வந்து பார்த்த பூசாரிக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. உடனடியாக அந்த கல்லை எடுத்து வழிப்பட தொடங்கினார். அதன் பின்னர் ஒருநாள் இக்கல்லை பெண் பூசாரி பூஜை செய்ய தொடங்கியுள்ளார். அப்போது பெரும் மழை பெய்திருக்கிறது. இத்தனை நாட்களாக வறண்டு கிடந்த பூமியில் பெருமழை பெய்தது நிச்சயம் ஒரு அதிசயம்தான். எனவே, அப்போதிலிருந்து பெண் பூசாரிகள் மட்டும் பூஜை செய்ய தொடங்கினர். அந்த கிராமம் செழித்து வளர்ந்தது.

வழிபாடு
எனவே இந்த தெய்வத்தை வழிபட பெண்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் ஆண்களும் வழிபட முயன்றனர். இதற்கு மாற்று வழியை அந்த பெண் பூசாரிதான் சொல்லியிருக்கிறார். அதாவது பெண்கள் வேடமிட்டு வழிபடலாம் என்பதுதான் அந்த மாற்று வழி. அப்போதிலிருந்து தற்போது வரை ஆண்கள் தங்களை பெண்களாக வேடமிட்டு இந்த தெய்வத்தை வழிபட்டு வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இந்த தெய்வம் தானாக உருவானது என்பதால் இதற்கு சுயம்பு தேவி என்று பெயரிட்டுள்ளனர். இக்கோயிலின் சந்நிதியில் மேற்கூறை கிடையாது. கேரளாவில் வேறு எந்த கோயிலிலும் இப்படி மேற்கூரை இல்லாமல் இருப்பதில்லை. அந்த வகையிலும் இக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

சுயம்பு தேவி
இக்கோயிலில் உள்ள தெய்வம் 'சுயம்பு தேவி' என உள்ளூர் மக்களால் அழைக்கப்பட்டாலும், 'கொட்டாங்குளங்கரா தேவி' என்பதுதான் இத்தெய்வத்தின் பரவலாக பெயராக அறியப்படுகிறது. கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் திருவிழாவில் ஆண்கள், தங்களை பெண்களாக பாவித்து கோயிலில் விளக்கு ஏற்றுகின்றனர். இவர்களின் மேக்கப்பை பார்த்தால் ஆண் யார் பெண் யார் என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் இருக்கும். இப்படியாக வழிபாடு செய்து விளக்கு ஏற்றுவதன் மூலம் பாவங்கள் முழுவதும் நீங்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கையாகும். இந்த திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் மக்கள் அதிக அளவில் பங்கேற்கின்றனர்.

வாய்மொழிக் கதைகள்
இந்த தெய்வம் குறித்து மற்றொரு வாய்வழி கதையும் இருக்கிறது. அதாவது காட்டில் மாடு மேய்துக்கொண்டிருந்த சிறுவர்கள் ஒரு கல்லுக்கு பூ வைத்து அலங்காரம் செய்து விளையாடிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது அந்த கல்லிலிருந்து தெய்வீக ஒளி வெளியேறுவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். இப்படிதான் இந்த தெய்வம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் முதலில் சொன்ன கதைக்கும் தற்போது சொன்ன கதைக்கும் ஒரேயொரு ஒற்றுமை இருக்கிறது. அதாவது சிறுவர்கள்தான் இந்த தெய்வத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள். எனவே இந்த தெய்வத்தை வழிபட எவ்வித வயது தடையும் விதிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications