பிளாஷ்பேக்.. உயிருக்கு ஆபத்து என அன்றே புகார் அளித்த நடிகை மஞ்சு வாரியர்.. நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: நடிகை மஞ்சுவாரியரின் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் பேஸ்புக்கில் புகார் அளித்துள்ள நிலையில் அவர் கடந்த 2019ஆம் ஆண்டே தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக வேறு ஒரு இயக்குநர் மீது மஞ்சு புகார் கொடுத்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.
மலையாள திரைப்பட இயக்குநர் ஸ்ரீகுமார் மேனன். இவர் கல்யாண் ஜுவல்லர்ஸ், மலப்புரம் கோல்ட் உள்பட பல முன்னணி விளம்பர படங்களை இயக்கியவர். இவர் மோகன்லால், மஞ்சுவாரியர், பிரகாஷ் ராஜ் நடித்த ஓடியன் எனும் படத்தை 2018 இல் இயக்கினார்.
இந்த படம் அந்த அளவுக்கு ஓடவில்லை. இந்த நிலையில் இயக்குநர் ஸ்ரீகுமாருக்கு எதிராக நடிகை மஞ்சு வாரியர், கேரள டிஜிபியிடம் ஒரு புகார் அளித்திருந்தார்.
நடிகை மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்தா?.. 4 நாட்களாக காணவில்லை? பிரபல இயக்குநர் பரபரப்பு பதிவு!
ஓடியன் படம்
அந்த புகாரில் ஓடியன் ரிலீஸுக்கு பிறகு இயக்குநர் ஸ்ரீகுமார் சமூக வலைதளங்களில் என்னை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார். இதை கண்டு கொள்ளாமல் இருந்தேன். ஆனால் அவரும் அவர் நண்பர் மாத்யூ சாமுவேலும் (தெஹல்காவின் முன்னாள் மேனேஜிங் எடிட்டர்) எனக்கு எதிராக அவதூறுகளை பரப்பு வருகிறார்கள்.
உயிருக்கு ஆபத்து என மஞ்சு புகார்
அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சுகிறேன். இவ்வாறு இந்த புகாரில் மஞ்சுவாரியர் அளித்திருந்தது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த புகாருக்கு ஸ்ரீகுமரன் பதில் அளித்திருந்தார். அதில் அவர் கூறுகையில் பத்திரிகைகளில் பார்த்தே உங்கள் புகாரை தெரிந்து கொண்டேன்.
காரியம்
காரியம் முடிந்ததும் கைவிட்டுவிட்டு செல்பவர்தான் மஞ்சு வாரியர், அவரை நம்ப வேண்டாம் என பலர் என்னிடம் சொன்னார்கள். திலீப்பை பிரிந்து வீட்டை விட்டு வெளியே வரும் போது வெறும் 500 ரூபாய் மட்டுமே இருக்கிறது என மஞ்சு சொன்னதை நான் மறக்கவில்லை. அப்போது ரூ 25 லட்சம் கொடுத்து விளம்பர படத்திற்கும் சினிமாவுக்கும் மஞ்சுவை ஒப்பந்தம் செய்தேன்.
குருவாயூரப்பன்
அப்போது அந்த குருவாயூரப்பனே வந்து உதவி செய்ததாக நீங்கள் சொன்னதும் ஞாபகத்தில் இருக்கிறது. உங்களுக்கு என்ன துரோகம் செய்தேன் என தெரியவில்லை. உங்களால் ஏராளமான அவமானங்களை நான் சந்தித்துவிட்டேன். உங்கள் புகாரை நான் சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்றார். இந்த நிலையில் மஞ்சுவின் புகாரையொட்டி ஸ்ரீகுமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மஞ்சு வாரியருக்கு என்னாச்சு
இந்த நிலையில் தற்போது மஞ்சு வாரியரின் உயிருக்கு ஆபத்து என இயக்குநர் சணல் குமார் சசிதரன் சமூகவலைதளங்களில் ஒரு புகாரை கொடுத்துள்ளார். 4 நாட்களுக்கு முன்பே மஞ்சு வாரியர் குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தும் அதுகுறித்து மஞ்சுவோ அவர் சம்பந்தப்பட்டவர்களோ மறுப்போ விளக்கமோ தெரிவிக்கவில்லை என தனது பதிவில் சசிதரன் குறிப்பிட்டுள்ளார்.