திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
திருவனந்தபுரம்: கேரளாவில் நாளை லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் திருச்சூர் பூரம் திருவிழா கெடுபிடிகள் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளன. திருச்சூர் பூரம் திருவிழா கெடுபிடிகள் அரசியல் விவகாரமாகவும் உருவெடுத்துள்ளது.
கேரளாவின் திருச்சூர் பூரம் திருவிழா சர்வதேச அளவில் புகழ் பெற்றது. திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். 50-க்கும் மேற்பட்ட யானைகள் அலங்கரிக்கப்பட்டு முத்துக்குடை பரிமாறும் 36 மணிநேர திருவிழாவும் வாணவேடிக்கையும் புகழ் பெற்றது. இத்திருவிழாவை காண வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர்.

தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற்று வருகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக நாளை 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கேரளா மாநில போலீசார் திருச்சூர் பூரம் திருவிழா நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க நேரிட்டது. ஏப்ரல் 20-ந் தேதி இரவு நடத்தப்பட வேண்டிய வாண வேடிக்கை நிகழ்ச்சி பகலிலேயே நடத்தும் நிலைமையும் உருவானது. முந்தைய நாள் பூரம் திருவிழா நிகழ்ச்சிகள் பாதியிலேயே நிறுத்த வேண்டிய நிலைமையும் உருவானது. இதுதான் இப்போது பெரிய சர்ச்சையாகிவிட்டது. அத்துடன் அரசியல் விவகாரமாகவும் உருவெடுத்துவிட்டது.
திருச்சூர் பூரம் திருவிழாவுக்கான கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து திருச்சூர் லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி நேரடியாக களம் இறங்கினார். திருச்சூர் கோவில் நிர்வாகத்துடன் கலந்து பேசி வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தார். இது ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது.
இதனால் திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சைகளுக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் பினராயி விஜயன் அதிரடியாக உத்தரவிட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சியோ, திருச்சூரில் பாஜகவின் வேட்பாளராகப் போட்டியிடும் நடிகர் சுரேஷ் கோபியை வெற்றி பெற வைக்கவே இப்படியான ஒரு சிக்கலை உருவாக்கி பாஜகவுக்கு ஆதரவான நிலைமையை இடதுசாரி அரசாங்கம் உருவாக்கியது என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
திருச்சூர் லோக்சபா தொகுதியில் பாஜகவின் சுரேஷ் கோபி, சிபிஐ சுனில் குமார், காங்கிரஸின் மூத்த தலைவர் முரளீதரன் களம் காண்கின்றனர். திருச்சூர் லோக்சபா தொகுதியில் கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதாபன் 39.83%; சிபிஐ ராஜாஜி மேத்யூ தாமஸ் 30.85%; பாஜகவின் சுரேஷ் கோபி 28.19% வாக்குகளைப் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications