கேரளாவில் ஏப்.26-ல் தேர்தல்: 20 தொகுதிகளில் 194 பேர்.. 6 தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லை!
திருவனந்தபுரம்: கேரளாவில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 26-ந் தேதி ஒரே கட்டமாக 20 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. கேரளாவின் 20 தொகுதிகளிலும் மொத்தம் 194 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். கேரளாவில் 6 லோக்சபா தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட களம் காணவில்லை.
18-வது லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. 102 தொகுதிகளில் ஏப்ரல் 16-ந் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்தது. இதில் தமிழகம், புதுவையின் 40 தொகுதிகளும் அடங்கும். 2-வது கட்டமாக 13 மாநிலங்களின் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ல் தேர்தல் நடைபெறுகிறது. 2-வது கட்ட தேர்தலில் கேரளாவின் 20 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கேரளா களம் என்ன?: கேரளாதான் நாட்டின் கல்வி அறிவில் முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் இந்துக்கள் 55%; முஸ்லிம்கள் 27%; கிறிஸ்தவர்கள் 18% உள்ளனர். கேரளாவைப் பொறுத்தவரையில் ஆளும் இடதுசாரிகள் கூட்டணி- இடது ஜனநாயக முன்னணி, எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி- ஐக்கிய ஜனநாயக முன்னணி இடையேதான் பிரதான போட்டி. தற்போது பாஜகவும் கேரளாவில் நிலை நிறுத்தப் போராடுகிறது. இடது ஜனநாயக முன்னணியில் இந்திய கம்யூனிஸ்ட், சிபிஎம், கேரள காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கேரள காங்கிரஸ் (பி), இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், ஜனஅதிபத்ய கேரள காங்கிரஸ் இருக்கின்றன. காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்), கேரளா ஜனநாயகக் கட்சி உள்ளிட்டவைகளை கொண்டது ஜனநாயக முன்னணி. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கேரளாவின் 20 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி 19 இடங்களில் வென்றது. சிபிஎம் ஒரே ஒரு தொகுதியில் வென்றது. பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை.
கருத்து கணிப்புகள்: கேரளா லோக்சபா தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகள் அனைத்திலும் காங்கிரஸ் கூட்டணியே அதிக இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது. கேரளாவில் எதிரும் புதிருமாக களம் காணும் இடதுசாரிகளும் காங்கிரஸும் தேசிய அளவில் "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. ஆனாலும் "இந்தியா" கூட்டணி தலைவர்கள் கேரளாவில் மட்டும் சரமாரியாக தங்களுக்குள்ளே மோதிக் கொள்கின்றன.
ஒரு பெண் வேட்பாளர் கூட இல்லையே: கோட்டயம் லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக 14 பேரும் ஆலத்தூரில் குறைந்தபட்சமாக 5 பேரும் போட்டியிடுகின்றனர். கோழிக்கோடு- 13; கொல்லம்-12; கண்ணூர்- 12 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 194 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 25 பெண் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். ஆனால் கேரளாவின் 6 லோக்சபா தொகுதிகளில் ஒரு பெண் வேட்பாளர் கூட போட்டியிடவும் இல்லை. பத்தனம்திட்டா, மாவேலிக்கரா, கோட்டயம், திரிசூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய தொகுதிகளில் பெண் வேட்பாளர்களே இல்லை.
விஐபி வேட்பாளர்கள்: திருவனந்தபுரம் தொகுதியில் பாஜகவின் ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸின் சசி தரூர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. வயநாடு லோக்சபா தொகுதியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மூத்த இடதுசாரித் தலைவர் ஆனி ராஜா மோதுகின்றனர். அட்டிங்கல் தொகுதியில் பாஜக மூத்த தலைவர் முரளீதரன் களம் காண்கிறார். பத்தனம்திட்டாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏகே ஆண்டனி மகன் அனில் ஆண்டனி, பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார். ஆழப்புழாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் கேசி வேணுகோபால் களம் காண்கிறார். பாஜகவின் ஒரே முஸ்லிம் வேட்பாளர் அப்துல் சலாம், மலப்புரத்தில் போட்டியிடுகிறார். திரிசூரில் நடிகர் சுரேஷ் கோபி, பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.












Click it and Unblock the Notifications