ராகுல் காந்திக்கு அருளாசி வழங்கிய மாதா அமிர்தானந்தமயி! பாரத் ஜோடோ யாத்ரா விறு விறு!
திருவனந்தபுரம்: கேரளாவில் பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, மாதா அமிர்தானந்தமயியை அவரது ஆசிரமத்தில் சந்தித்து அருளாசி பெற்றுக் கொண்டார்.
ராகுல் கையில் மலர்களையும், கனியையும் வழங்கி மனதார வாழ்த்தி வழியனுப்பி வைத்திருக்கிறார் மாதா அமிர்தானந்தமயி.
ராகுல் மேற்கொண்டுள்ள நடைபயணத்தில் இந்தச் சந்திப்பு முக்கிய நிகழ்வாக காங்கிரஸ் கட்சியினரால் கருதப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தல்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தொடங்கிவிட்டார் ராகுல் காந்தி. பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் 12 மாநிலங்கள் வழியாக 150 நாட்களுக்கு இந்த பயணத்தை நடத்துகிறார் ராகுல் காந்தி. சுமார் 3,500 கிமீ தூரம் பயணம் செய்யும் வகையில் ராகுலுக்கு பயணத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

மாதா அமிர்தானந்தமயி
கடந்த 7ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரத் ஜோடோ யாத்ராவை தொடங்கிய ராகுல்காந்தி, கேரளாவில் நான்கு நாட்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கொல்லம் மாவட்டத்தில் வள்ளிகாவு என்ற இடத்தை கடக்கும் போது அங்கிருந்த மாதா அமிர்தானந்தமயியின் ஆசிரமத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்து அருளாசி பெற்றார் ராகுல். இது கேரள அளவிலும் தேசிய அளவிலும் மிகுந்த கவனம் ஈர்த்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

கர்நாடகா பயணம்
கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவில் பாரத் ஜோடா யாத்ரா செல்லும் ராகுல் அங்கும் மடாதிபதிகள் சிலரை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். ஆன்மிக குருமார்களை சந்திப்பதன் மூலம் பாஜகவுக்கு சைலண்டாக பதிலடி கொடுக்க திட்டமிட்டுள்ளார் ராகுல். ராகுலின் இந்த பயணத்தால் காங்கிரஸ் கட்சியினருக்கு புது உற்சாகம் கிடைத்திருக்கிறது.

திருப்புமுனை
பாஜக ஆட்சிக்கு எதிராக கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கியுள்ள இந்த சூறாவளி சுற்றுப்பயணம் அவருக்கும் கட்சிக்கும் திருப்புமுனையை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்திருக்கிறது. கடந்த கால தேர்தல்களில் ராகுல் முறையாக பிரச்சாரத்துக்கு செல்லவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முறை அது போன்ற குற்றச்சாட்டுகளுக்கே இடமிருக்காது எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications