நைட்டியுடன் ரோட்டில்.. மோடியை கண்டித்து.. மீசை வழித்த.. "மேக்ஸி மாமா"வை ஞாபகம் இருக்கா.. ஷாக் தகவல்
ஓட்டல் அதிபர் மேக்ஸி மாமா திடீரென இறந்துவிட்டார்
திருவனந்தபுரம்: பிரதமர் மோடியை கண்டித்து, மீசையை வழித்த நைட்டி மாமாவை நினைவிருக்கிறதா? அந்த ஓட்டல் ஓனர் திடீரென இறந்துவிட்டதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யார் இந்த நைட்டி மாமா?
கொல்லம் மாவட்டம், கடைக்கல் பகுதியை சேர்ந்தவர்.. இந்த பகுதியில் நைட்டி மாமா என்றால் படுபிரபலம்.. இதே ஏரியாவில் ரோட்டோரம் ஒரு சாப்பாடு கடை நடத்தி வந்தார்.. இவரது உண்மையான பெயர் எகியா...
இவர் முதலில் துபாயில் வேலை பார்த்துள்ளார்.. அங்கு வேலையில்லாமல் திரும்பி வந்ததும், சாலையோரம் கையேந்தி பவன் ஆரம்பித்தார்..

சாப்பாட்டு கடை
அந்த கடையில் டீ, மதிய சாப்பாடு போன்றவற்றை மிகக் குறைந்த விலைக்கு விற்றார்.. அதுமட்டுமல்ல, 10 பரோட்டாக்கள் வாங்கினால் 5 தோசைகள் இலவசம், 5 சிக்கன் குழம்பு வாங்கினால் ஒரு சிக்கன் குழம்பு இலவசம் என்று புது புது ஆபர்களை வழங்கி மக்களிடம் பிரபலமானவர். சாப்பாட்டை யாராவது மீதம் வைத்துவிட்டால் ஸ்பாட் ஃபைன் போட்டுவிடுவார்.. அதனால் மிச்சம் வைக்காமல் அனைவரும் சாப்பிட்டு செல்வார்கள்.

பளார்
18 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் இவர் கடைப்பக்கமாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் வந்திருக்கிறார். கடையில் வேலை பிஸியில், எகியா இருந்துள்ளார்.. வேட்டியை மடித்து கொண்டு மும்முரமாக வேலை பார்த்து கொண்டிருந்தார்.. அதனால், இன்ஸ்பெக்டர் அங்கு வந்ததை எகியா கவனிக்கவில்லை.. இதனால் கடுப்பான அந்த இன்ஸ்பெக்டர் எகியாவிடம், "ஒரு போலீஸ்காரன் வந்து இங்கே நிக்கிறேன், வேட்டியை மரியாதையாக கீழே இறக்கிவிடத் தெரியாதா?" என்று கேட்டு கன்னத்தில் பளார் என ஒரு அறை விட்டிருக்கிறார்.

ஹோட்டல்
இதனால் அதிர்ச்சி அடைந்த எகியா கடகடவென வீட்டுக்குள் நுழைந்தார்.. கட்டியிருந்த் வேட்டியை கழட்டி தூக்கி தூரப்போட்டுவிட்டு, அதற்கு பதிலாக நைட்டியை போட்டுக்கொண்டு மறுபடியும் கடையில் வந்து நின்றார்.. அதாவது நைட்டி போட்டுக் கொண்டால், போலீஸ்காரரை பார்க்கும்போதெல்லாம் வேட்டி போல் மடித்து விடவேண்டியதில்லை என்பதாலேயே வேட்டியில் இருந்து நைட்டிக்கு மாறினார். அப்போது முதல் இவர் நைட்டி மாமா என்றே அழைக்கப்பட்டார்.

கூட்ட நெரிசல்
ஒருநாள், தினம் தினம் பாடுபட்டு, அந்த சாப்பாட்டு கடையில் சேகரித்த பணத்தை கொஞ்சம், கொஞ்சமாக சேர்த்து, மொத்தம் 23 ஆயிரம் ரூபாய் வைத்திருந்தார்... அந்த நேரம்தான் திடீரென பணமதிப்பிழப்பு அறிவிப்பு வந்துவிட்டது.. இவர் வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று சொன்னதுமே அதிர்ச்சி அடைந்து, அதை மாற்றுவதற்காக அங்கே வரிசையில் போய் நின்றார். ஆனால் கூட்டம் நெருக்கி தள்ளி கொண்டே இருந்தது.

சபதம்
இதனால், 2 நாளாகியும் அந்த பணத்தை இவரால் மாற்ற முடியவில்லை... இதனால் வரிசையில் காத்திருந்தவர், ஒருகட்டத்தில் தலைசுற்றி மயங்கி அங்கேயே விழுந்துவிட்டார்.. கோபமடைந்தவர் தன்னிடம் இருந்த ரூ.23 ஆயிரத்தையும் எரித்து போராட்டம் நடத்தினார்... அதுமட்டுமல்ல, அப்போது நைட்டி மாமா ஒரு சபதம் போட்டார்.. "என் பணத்தை செல்லாது என அறிவித்தவர் ஆட்சியில் இருக்கும் வரை பாதி மீசை, பாதி தலை முடியோடுதான் இருப்பேன்" என்று சொல்லி, அப்போதுமுதல் பாதி மீசையோடும் வலம் வந்து கொண்டிருந்தார் நைட்டி மாமா!

அதிர்ச்சி
இந்நிலையில், கடந்த சில மாதமாக உடல் நலக்குறைவால் எகியா அவதிப்பட்டு வந்தார்... இதனால் ஓட்டலையும் திறக்காமலேயே இருந்தார்.. அவரது மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தவர், பலனின்றி திடீரென இறந்துவிட்டார்.. இவரது மரணம், அந்த பகுதி மக்களுக்கு பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications