இலங்கை குண்டுவெடிப்பு.. கேரளாவில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் கைது.. என்ஐஏ அதிரடி!
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்: இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
கடந்த 21ம் தேதி ஞாயிறு அன்று இலங்கையில் வரிசையாக குண்டு வெடிப்பு தாக்குதல் நடந்தது. இலங்கை மட்டுமில்லாமல் தெற்காசியாவிலேயே நடந்த மிகப்பெரிய தாக்குதல் இது என்று கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பில் 350க்கும் அதிகமானோர் பலியானார்கள். அங்கு அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்து உள்ளது. 450க்கும் அதிகமானோர் இதில் காயம் அடைந்தனர். இதில் இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.

நிறைய சோதனை
இந்த குண்டுவெடிப்பு காரணமாக இந்தியாவிலும் நிறைய சோதனைகள், விசாரணைகள் நடைபெற்று வருகிறது. இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை இலங்கையில் 32 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கேரளாவில் இது தொடர்பாக தொடர் சோதனைகள் நடந்து வருகிறது.

இலங்கை குண்டுவெடிப்பு
இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கேரளாவின் காசர்கோடு பகுதியை சேர்ந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். காசர்கோட்டில் இரண்டு இடங்களிலும், பாலக்காட்டில் ஒரு இடத்திலும் சோதனை நடந்தது. தேசிய புலனாய்வு அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் அளித்த தகவலின் பெயரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

ரியாஸ் யார்
இந்த சோதனையின் முடிவில் காசர்கோட்டை சேர்ந்த 29 வயது நிரம்பிய ரியாஸ் அபு பக்கர் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார். இவர் தான் ஒரு தீவிரவாதிதான் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக என்ஐஏ தரப்பு தெரிவித்து இருக்கிறது. தனக்கும் ஐஎஸ் அமைப்பில் உள்ள சிலருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக இவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

தேசிய புலனாய்வு அமைப்பு
இலங்கையில் தாக்குதல் நடத்திய சரான் ஹாசிமை தீவிரமாக பின்பற்றி வருவதாகவும், அவரின் நண்பர்கள் பலரை தனக்கு தெரியும் என்று இவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இவரின் நண்பர்கள் சிலரும் விரைவில் தேசிய புலனாய்வு அமைப்பு மூலம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications