கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு.. 3 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை! சுகாதாரத்துறை அலர்ட்
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் தெரிந்திருந்த நிலையில், அவரது ரத்த மாதிரி பரிசோதிக்கப்பட்டதில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனையடுத்து 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் 38 வயதான பெண்ணுக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருந்துள்ளது. அதேபோல மலப்புரம் மாவட்டத்திலும் மற்றொருவருக்கும் இந்த அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. இந்நிலையில் இருவரின் ரத்த மாதிரியும் புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து அப்பெண்ணின் வீட்டை சுற்றி 3 கி.மீ தொலைவுக்கு கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல பாலக்காடு, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தொற்றால் வேறு யாரேனும் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? என்பதை கண்டறிய ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 26 சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், "தொற்று பாதிப்பை தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க முடியுமோ அதை அத்தனையையும் எடுத்திருக்கிறோம். தொற்று பாதிப்புகளுடன் நெருக்கமாக இருந்தவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காவல்துறையின் உதவியை நாடியிருக்கிறோம்.
பொது மக்களுக்கு உதவ ஹெல்ப் லைன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல சமீப நாட்களில் இயற்கைக்கு மாறான மரணம் ஏற்பட்டிருக்கிறதா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications