கண்ணை மறைக்கும் வெற்றி.. பட்ட கஷ்டத்தை மறந்த ஆளும் கட்சி.. கொரோனாவை உதாசீனப்படுத்தும் பிற கட்சிகள்
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்த கட்சிகள் கூட்டம் கூட்டமாக வெற்றி ஊர்வலத்திற்கு செல்லும் போது கொரோனாவை மறந்தது சுகாதாரத் துறை அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது. இந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆகியவை போட்டியிட்டன.
மொத்தம் 941 பஞ்சாயத்துகளில் 442 பஞ்சாயத்துகளில் இடதுசாரி ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாம் இடத்தில் 344 பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கட்சியும் 33 பஞ்சாயத்துகளில் பாஜகவும் முன்னிலையில் உள்ளது.

ஊர்வலம்
3 கூட்டணிகளுமே கணிசமான இடங்களில் வெற்றி வாய்ப்பை பெற்றதால் அக்கட்சிகளின் தொண்டர்கள் வெற்றியை ஊர்வலமாகச் சென்று கொண்டாடி வருகிறார்கள். ஆனால் இந்த ஊர்வலங்களில் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை எந்த கட்சியினரும் பின்பற்றவில்லை.

கண்ணை மறைக்கும் வெற்றி
வெற்றி கண்ணை மறைத்ததால் பெரும்பாலானோர் மாஸ்க்களை போடவில்லை. சமூக இடைவெளி காற்றில் விடப்பட்டுள்ளது. பாதுகாப்பு நெறிமுறைகளை கொஞ்சம் கூட பின்பற்றாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வருங்காலத்தில் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவினால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ் பரவலின் மத்தியில் இந்தியா இருக்கிறது. அதிலும் கேரளாவில் இரண்டாம் அலை வீசி வருகிறது. இங்கு நாள்தோறும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறிருக்கையில் கொரோனா விதிகளை கொஞ்சமும் மதிக்காதது ஏன் என தெரியவில்லை.

கொரோனா விதிகள்
மேலும் கொரோனாவை ஒழித்தலில் பிற மாநிலங்களுக்கும் பிற நாடுகளுக்கும் முன்மாதிரியாக இருந்தது கேரளா மாநிலம். கேரளாவின் மாடலை பெரும்பாலானோர் பின்பற்றி தங்கள் மாநிலங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தினர். ஆனால் அந்த கஷ்டத்திற்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல் இந்த கட்சித் தொண்டர்கள் அதிலும் ஆளும் கட்சி கூட்டணியும் இணைந்து கொரோனா விதிகளை புறந்தள்ளியிருப்பது வேதனையை அளிக்கிறது.












Click it and Unblock the Notifications