ஓடும் ரயிலுக்குள் படமெடுத்த "பாம்பு.." ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக்! மதுரை ரயிலில் ஷாக்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து மதுரை வந்த எக்ஸ்பிரஸ் ரயிலுக்குள் புகுந்த பாம்பு ஒன்று பயணியை கடித்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடித்த அந்த பயணி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கேரளாவில் உள்ள குருவாயூரில் இருந்து மதுரைக்கு மதுரை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தினமும் குருவாயூரில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு இரவு 7.15 மணிக்கு மதுரைக்கு வந்து சேரும். இந்த ரயிலில் இரு மாநிலங்களை சேர்ந்த பயணிகள் அதிகம் பயணிப்பதை காண முடியும்.

வினோத சம்பவம்: கேரளாவில் இருந்து தமிழகத்திற்கும், தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கும் தொழில் நிமித்தமகவும் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காக செல்லும் பயணிகள் பலரும் இந்த ரயிலில் அடிக்கடி பயணம் செய்வார்கள்.. வழக்கம் போல இந்த ரயில் இன்று அதிகாலை குருவாயூரில் இருந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. ரயில் கோட்டயம் அருகே உள்ள எட்டுமனூர் அருகே வந்த போது, ரயிலுக்குள் வினோத சம்பவம் நடைபெற்றது.
தென்காசி இளைஞர்: அதாவது, ஓடும் ரயிலுக்குள் புகுந்த பாம்பு ஒன்று ரயிலில் பயணம் செய்த 21 வயது கார்த்திக் என்ற இளைஞரை கடித்தது. தென்காசியை சேர்ந்த கார்த்திக் பிரவோம் ரோடு ரயில்வே ஸ்டேஷனில் இருந்து மதுரை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறியிருக்கிறார். தனது சொந்த ஊரான தென்காசிக்கு செல்வதற்காக கார்த்திக் ரயிலில் ஏறியுள்ளார்.
பாம்பு கடித்தது: இந்த ரயில் காலை 10 மணியளவில் கோட்டயம் அருகே வந்த போது, தன்னை ஏதோ கடிப்பது போல உணர்ந்து இருக்கிறார். இதையடுத்து வலியால் அலறி துடித்த கார்த்திக்கை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அவரது உடல் நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பெட்டியை பூட்டி சீல் வைத்தனர்: இருக்கைக்கு அடியில் பாம்பைக் கண்டதாக சக பயணிகளும் கூறினர். இதையடுத்து எட்டுமனூர் ரயில் நிலையத்தில் ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. ரயிலில் பாம்பு புகுந்ததாக சொல்லப்படும் ஆறாவது பெட்டியை ரயில்வே அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
ரயில் நிறுத்தப்பட்டு இருக்கும் போதும் புதர் பகுதிகளில் இருந்து ஊர்ந்து வந்த பாம்பு பெட்டிக்குள் ஏறியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஓடும் ரயிலுக்குள் புகுந்த பாம்பு பயணியை கடித்த சம்பவம் ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications