திருவிழாவால் நிலச்சரிவிலிருந்து உயிர்பிழைத்த மக்கள்.. வயநாட்டில் 1984ல் நடந்தது என்ன?
திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவு துயரம், நாடு முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே முண்டக்கை பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டும் ஒரு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அப்போது நடந்த நிலச்சரிவுடன், சமீபத்தில் நடந்த நிலச்சரிவை ஒப்பிட்டு தேசிய தொலையுணர்வு மையம் (national remote sensing centre) சில ஆச்சரிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் அடுத்தடுத்து நடந்த நிலச்சரிவில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது இந்தியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு என்று அந்த மாநில அரசும், விஞ்ஞானிகளும் கூறி வருகின்றனர். வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2019ஆம் ஆண்டு புத்துமலை பகுதியிலும், இதே முண்டக்கை பகுதியில் கடந்த 1984ஆம் ஆண்டும் கூட நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முண்டக்கையில் நடந்த 2 நிலச்சரிவு சம்பவங்களை ஒப்பிட்டு பல்வேறு விவாதங்கள் நடந்து வருகின்றன.

1984 ஜூலை 1ஆம் தேதி முண்டக்கையில் நடந்த நிலச்சரிவு சம்பவம் தொடர்பாக கோழிக்கோட்டில் உள்ள நீர்வள மேம்பாடு மற்றும் மேலாண்மை மையம் ஆய்வு செய்தது. அதன்படி அந்த நிலச்சரிவு கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,240 மீட்டர் உயரத்தில் உருவாகியுள்ளது. பாறைகளும், மரங்களும் சுமார் 1.5 கி.மீ தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டு, அருணபுழா ஓடை வழித்தடத்தில் இருந்த அனைத்தையும் வாரி சுருட்டியது. சமீபத்தில் நடந்த நிலச்சரிவு தொடர்பான சேட்டிலைட் படத்தை இஸ்ரோ வெளியிட்டிருந்தது. இந்த சம்பவத்தில் ராட்சத பாறைகள், மரங்கள் உள்ளிட்டவை 8 கி.மீ தொலைவுக்கு அடித்து செல்லப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,550 மீட்டர் உயரத்தில் இந்த நிலச்சரிவு உருவாகியுள்ளது.
முக்கியமாக 1984ஆம் ஆண்டு சுமார் 80 ஏக்கர் பரப்பளவில் தான் நிலச்சரிவு உருவானது. அதனுடன் ஒப்பிடும்போது, இந்தமுறை 21 ஏக்கர் குறைவு. இருப்பினும் இந்த நிலச்சரிவு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.1984ஆம் ஆண்டு நடந்த நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 300 ஐ கடந்துவிட்டது. மேலும் 200க்கு மேற்பட்டவர்களின் நிலை என்ன ஆனதென்றே தெரியவில்லை. 1984ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவிலும் கடுமையான சேதாரங்கள் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்பிருந்தது. நிலச்சரிவு பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் நடந்ததாலும், பெரும்பாலான தேயிலை தோட்ட தொழிலாளிகள் திருவிழாவில் கலந்துகொள்ளச் சென்றதாலும் பாதிப்பு ஏற்படவில்லை.
1984ஆம் ஆண்டு மழையும் அதிகம் இருந்தது. 24 மணிநேரத்தில் 340 மி.மீ மழை பெய்திருந்தது. அந்தப் பகுதியில் 1984 ஜூன் - ஜூலை காலகட்டத்தில் 1,400 மி.மீ மழை கொட்டியுள்ளது. சமீபத்தில் நடந்த நிலச்சரிவின்போது முண்டக்கையில் 24 மணி நேரத்தில் 372 மி.மீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது. பாசக், நரசிம்ம பிரசாத் ஆகிய 2 விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். நிலச்சரிவு உள்ளிட்ட பேரிடர்களில் இருந்து தப்பிக்க, அந்தப் பகுதிகளை நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதிகளாக அறிவித்து, அங்கு கட்டிடங்கள் கட்டுவது உள்ளிட்ட மனித நடமாட்டத்துக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications