இஸ்ரேல் போருக்கு நடுவே.. கேரளாவில் காணொளியில் உரையாற்றிய ஹமாஸ் தலைவர்.. என்ன நடந்தது? பரபரப்பு
திருவனந்தபுரம்: இஸ்ரேல் மீது கடந்த 7 ம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படும் ஹமாஸ் அமைப்பின் தலைவர் கேரளாவில் நடந்த பேரணியில் காணொளி காட்சி வாயிலாக பேசியுள்ளதாக கூறப்படும் நிலையில் பாஜக போர்க்கொடி தூக்கி உள்ளது.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் காசா நகரில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையே நீண்டகாலமாக பிரச்சனை இருந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் தீவிரவாத அமைப்பு என அறிவித்துள்ளது. இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் என இருதரப்பும் அவ்வப்போது ஏவுகணைகைள ஏவி தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்நிலையில் தான் கடந்த 7 ம் தேதி ஹமாஸ் அமைப்பு திடீரென 7 ஆயிரம் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. மேலும் இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் துப்பாக்கியால் பொதுமக்களை சுட்டு கொன்றதோடு, பலரையும் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றனர்.
இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்துள்ளது. போர் தொடங்கி உள்ளதாக கூறி இஸ்ரேல், காசா நகரில் வான்வெளி தாக்குதலை நடத்தியது. இந்த மோதலில் தற்போது வரை பல ஆயிரம் மக்கள் இறந்துள்ள நிலையில் ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் காசா நகரை முற்றிலுமாக முற்றுகையிட்டுள்ள இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது.
அதோடு இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பு என இருதரப்புக்கும் பல உலக நாடுகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு குரலை கொடுத்து வருகின்றன. இதனால் போர் என்பது வரும் நாட்களில் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் பலி மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் இஸ்ரேல் மீதான 7 ம் தேதி தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ளது. அதோடு போரை கைவிட்டு இருதரப்பும் பேசி எல்லையை வகுத்த சுமூக முடிவு எடுக்க வேண்டும். சுதந்திர பாலஸ்தீனம் அமைய வேண்டும் எனவும் இந்தியா விரும்புகிறது.
இத்தகைய சூழலில் தான் அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலை தாக்கிய ஹமாஸ் தீவிரவாத குழவின் தலைவரான காலித் மஷால் காணொளி காட்சி மூலம் நேற்று கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கேரளாவின் மலப்புரத்தில் ஜமாத் இ இஸ்லாமியின் இளைஞர் பிரிவுகளில் ஒன்றாக கருதப்படும் சாலிடாரிட்டி இளைஞர் இயக்கம் சார்பில் நடந்த பேரணியில் அவர் காணொளியில் தோன்றி பேசியுள்ளார்.
இதனை பாஜக மாநில தலைவர் சுரேந்திரன் கடுமையாக கண்டித்துள்ளார். அதோடு சம்பவம் தொடர்பாக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛மலப்புரத்தில் நடந்த சாலிடாரிட்டி நிகழ்ச்சியில் ஹமாஸ் தலைவர் கலீத் மஷேலின் காணொளி மூலம் உரையாடி உள்ளார். பினராயி விஜயனின் கேரள காவல்துறை எங்கே? 'சேவ் பாலஸ்தீனம்' என்ற போர்வையில் ஹமாஸ் தீவிரவாத அமைப்பை அவர்கள் புகழ்கிறார்கள். அதோடு அதில் இருப்பவர்களை போர் வீரர்கள் என கூறி வருகின்றனர். இதனை ஏற்கவே முடியாது'' என கூறியுள்ளார்.
அதோடு நேற்று பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரணி கேரளாவில் நடந்தது. இதில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் பங்கேற்றார். இதனையும் பாஜக கண்டித்துள்ளது. அதோடு மாநிலத்தில் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் கேரள போலீசாரை வலியுறுத்தி உள்ளனர்.












Click it and Unblock the Notifications