கேரளாவில் பாரத் பந்த்.. கடைகள் மூடல்.. பொது போக்குவரத்து முடக்கம்!
திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை கண்டித்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் கேரளாவில் பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என கடும் குளிர், வெயில், மழை, காற்று என இயற்கை பேரிடர்களை பொறுத்துக் கொண்டு ஒரு பக்கம் விவசாயிகள் உயிரிழப்பு என்ற வேதனையை சுமந்து கொண்டு குடும்பத்தினரை பிரிந்து கடந்த 10 மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
வேளாண் சட்டங்கள் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு இன்றுடன் ஓராண்டு ஆகிறது என்பதால் நாடு தழுவிய போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்தன.

தமிழகம், சத்தீஸ்கர், கேரளா, பஞ்சாப், ஜார்க்கண்ட், ஆந்திரா ஆகிய மாநிலங்களின் அரசுகள் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளன. இந்த பாரத் பந்த் போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன. அந்த வகையில் விவசாயிகள் போராட்டத்தை கேரளாவும் ஆதரவு தெரிவித்து மாநிலத்தில் முழு அடைப்பை அறிவித்தது.
அதன்படி இன்றைய தினம் காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த பாரத் பந்த் போராட்டத்தை அடுத்து மாநிலத்தில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து இயக்கப்படவில்லை. அத்தியாவசிய பேருந்து சேவைகளை மட்டும் கேரளா போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படுகிறது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் (பொறுப்பு) விஜயராகவன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் நாட்டில் உள்ள விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கும் விதமாக பாரத் பந்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். அது போல் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் கூறுகையில் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஐக்கிய ஜனநாயக முன்னணி பாரத் பந்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாமும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
கேரளாவில் பாரத் பந்தை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சட்டத்தை சமூக விரோதிகள் தங்கள் கையில் எடுத்துக் கொள்ளாத வண்ணம் வடக்கு கேரளாவில் கண்காணிப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும் என மாநில டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications