அசைக்க முடியாதுல்ல.. காங்கிரஸ் கோட்டை என நிரூபித்த ரிசல்ட்! முக்கோண மோதலில் பறிபோன பாஜக டெபாசிட்!
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் புதுப்பள்ளி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சாண்டி உம்மன் அபார வெற்றி பெற்றுள்ளார். இங்கு பாஜக வேட்பாளர் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார்.
கேரள முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி கடந்த ஜூலை மாதம் 18ஆம் தேதி காலமானார். இந்நிலையில் அவரது தொகுதியான புதுப்பள்ளியில் இடைத்தேர்தல் நடந்தது. அதேபோல் திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களைச் சேர்ந்த 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடந்தது.

கேரள மாநிலத்தின் புதுப்பள்ளி தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மறைந்த உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன், காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். பாஜக சார்பில் லிஜின் லால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் கேஜ் தாமஸ் ஆகியோர் வேட்பாளர்களாக களம் கண்டனர்.
கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி தொகுதியில் 1970 முதல் தான் இறக்கும் வரை தொடர்ச்சியாக 12 முறை, அதாவது 53 ஆண்டுகள் உம்மன் சாண்டி தான் எம்.எல்.ஏ ஆக இருந்தார். உம்மன் சாண்டியின் கோட்டையான புதுப்பள்ளி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற பாஜக, காங்கிரஸ், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
கடந்த 5ஆம் தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் சாண்டி உம்மன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளார். 10 ஆவது சுற்றின் முடிவில் மார்க்சிஸ்ட் வேட்பாளரை விட 37 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் சாண்டி உம்மன்.
வாக்கு எண்ணிக்கை தொடக்கம் முதலே, சாண்டி உம்மன் முன்னிலை வகித்து வந்த நிலையில், அவர் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் கேஜ் தாமஸை விட, 37,719 வாக்குகள் அதிகம் பெற்று சாண்டி உம்மன் வெற்றி பெற்றுள்ளார்.
மொத்தம் பதிவான வாக்குகளில், சாண்டி உம்மன் 80,144 வாக்குகள் பெற்றுள்ளார். பாஜக சார்பில் போட்டியிட்ட லிஜின் லால் வெறும் 5.05% வாக்குகள் (6,558 வாக்குகள்) மட்டுமே பெற்று டெபாசிட்டை பறிகொடுத்துள்ளார். தொடர்ந்து 53 ஆண்டுகளாக காங்கிரஸ் வசமிருந்த இந்த தொகுதியை மீண்டும் அக்கட்சி தக்க வைத்துள்ளது.
உம்மன் சாண்டியின் கோட்டையாக விளங்கிய புதுப்பள்ளி தொகுதி, எப்போதுமே காங்கிரஸ் கோட்டைதான் என நிரூபித்துள்ளார் சாண்டி உம்மன். புதுப்பள்ளி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சாண்டி உம்மன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும், இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
7 தொகுதி இடைத்தேர்தலில், உத்தர பிரதேசத்தின் கோசி தொகுதியிலும், ஜார்கண்டின் டும்ரி, தன்பூர், திரிபுராவின் போக்ஸாநகர், உத்தரகாண்டின் பாகேஷ்வர் ஆகிய தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் 'இந்திய' கூட்டணி வேட்பாளர்கள் களமிறங்கினர். மேற்கு வங்கத்தின் துப்குரியிலும், கேரளாவின் புதுப்பள்ளியிலும் தனித்தனியாகப் போட்டியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications