சபரிமலை யாத்ரீகர்களுக்கு குட் நியூஸ்.. வந்தே மெட்ரோ ரயில் வருகிறதா? எப்போது தெரியுமா?
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு வரும் 2030ஆம் ஆண்டுக்குள் வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர ரயில்வே நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
கேரள மாநிலத்தில் உலக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. இங்கு மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை செய்யப்படும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து ஐயப்பனை தரிசிக்க வருகை தருவர்.

சபரிமலைக்கு வரக் கூடிய பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக சபரிமலைக்கு வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யும் பணிகளை இந்திய ரயில்வே தொடங்கியுள்ளது.
செங்கனூரில் இருந்து பம்பா வரை அமைக்கப்படும் ரயில் பாதையில் வந்தே மெட்ரோ ரயிலை இயக்கலாம் என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சபரிமலை வந்தே மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்ற ரூ9 ஆயிரம் கோடி செலவாகும் என உத்தேச மதிப்பு போடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் முடிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ரயில்வே துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
அடுத்த 30 ஆண்டுகளில் சபரிமலை செல்லும் சாலைகளில் போக்குவரத்து கணிசமாக அதிகரிக்கும். இதனால் புதிய பாதை தேவைப்படுகிறது. எனவே ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் துறைகள் மற்றும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெற 2 ஆண்டுகள் ஆகும் என ரயில்வே கணக்கிட்டுள்ளது. மேலும் புதிய பாதைக்கு நிலத்தை மாநில அரசு கையகப்படுத்த வேண்டும். இந்த நடைமுறைகள் எல்லாம் காலாகாலத்தில் முடிக்கப்பட்டால் 3 ஆண்டுகளில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கட்டுமானத்தை தொடங்கலாம். இந்த புதிய பாதை 76 கி.மீ. நீளத்திற்கு போடப்படுகிறது.
2030 ஆம் ஆண்டுக்குள் வந்தே மெட்ரோ ரயில் செயல்படவே தொடங்கிவிடும் என ரயில்வே நிர்வாகம் கருதுகிறது. சபரிமலைக்கு மெட்ரோ ரயில் இயக்க திட்டமிட்டுள்ள நிலையில் நங்கமாலி- எரிமேலி ரயில் திட்டம் 25 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்திற்கு ரூ . 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது மாநில அரசு.
மெட்ரோ ரயில்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் பெரும் பங்காற்றி வருகிறது. அதிலும் சபரிமலையில் அடுத்த 30 ஆண்டுகளில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்போதே மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications