எது எப்படியோ... கேராளவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது ஊர்ஜிதமாகியுள்ளது -ரமேஷ் சென்னிதாலா
திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை என்பது நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் உறுதியாக்கியுள்ளதாக கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார்.
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து ஐக்கிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான எம்.எம்.ஹசன், முல்லப்பள்ளி ராமச்சந்திரன், ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கூறிய முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் யு.டி.எஃப்.க்கு எதிரான நிலைப்பாட்டை காட்டவில்லை என்றும் மாநகராட்சி உட்பட பல இடங்களில் நல்ல வெற்றியை பெற்றிருப்பதாகவும் கூறினார். மேலும், தேர்தல் முடிவுகள் குறித்து முழுமையாக ஆராயப்பட்டு தேவையெனில் செயல்பாடுகளில் சில மாற்றங்களை கொண்டு வருவோம் எனத் தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா, எது எப்படியோ கேரளாவில் பாஜகவுக்கு இடமில்லை என்பதை மக்கள் உறுதிப்படக் கூறியுள்ளார்கள் என்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நல்ல பாடத்தை புகட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் தேர்தல் முடிவு குறித்து கருத்துக் கூறியுள்ள ஐ.யூ.எம்.எல். முக்கியத் தலைவரும், எம்.பியுமான பி.கே. குன்ஹாலி குட்டி, UDF கூட்டணியில் வாக்குவங்கிக்கு எந்த சேதாரமும் ஏற்படவில்லை என்றும் ஆனால் அதேவேளையில் தெற்கு கேரளா மற்றும் மத்திய கேரளாவில் UDF கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து அவசியம் ஆராய வேண்டும் எனவும் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் தேர்தல் முடிவுகள் குறித்து நாளை விரிவாக ஆலோசித்து ஆராயப்படும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications