25 கோடி அப்பே! கேரளாவில் விறு விறுப்பாக நடக்கும் "ஓணம் பம்பர் லாட்டரி.." குலுக்கல் எப்போது?
திருவனந்தபுரம்: கேரளாவில் அதிக பரிசுத்தொகை கொண்ட ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டின் விற்பனை தொடங்கியுள்ளது. கடந்த மாதம் இறுதியில் விற்பனை தொடங்கிய நிலையில், லாட்டரி கடைகளில் டிக்கெட் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஓணம் பம்பர் லாட்டரிக்கு முதல் பரிசாக ரூ.25 கோடி வழங்கப்படும். இதில் பரிசு அடித்தால் எவ்வளவு கிடைக்கும்? எப்போது குலுக்கல் நடைபெறும் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
கேரளாவில் லாட்டரி டிக்கெட்டிற்கு அனுமதி உள்ளது. அங்கு மாநில அரசே லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. தினமும் அங்கு ரூ.40 விலை கொண்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. வின்வின், ஸ்ரீசக்தி, பிஃப்டி பிஃப்டி, காருண்யா பிளஸ், நிர்மல், காருண்யா, அக்சயா என வாரத்திற்கு 7 நாளும் குலுக்கல் நடைபெறும்.

இதில் பிஃப்டி பிஃப்டி லாட்டரி டிக்கெட்டிற்கு மட்டும் முதல் பரிசாக ரூ.1 கோடி வழங்கப்படும். இது தவிர மாதத்திற்கு 6 பம்பர் லாட்டரி டிக்கெட்டுகளும் நடைபெறுகின்றன. பல கோடி பரிசுத்தொகை கொண்டவையாக இந்த லாட்டரி டிக்கெட்டுகள் உள்ளன. கிறிஸ்துமஸ் நியூஇயர் பம்பர், சம்மர் பம்பர், விஷு பம்பர், மழைக்கால பம்பர், ஓணம் பம்பர், பூஜா பம்பர் என ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு அதிகபட்சமாக ரூ.25 கோடி பரிசுத்தொகை அளிக்கப்படுகிறது.
இதனால், கேரள மக்கள் மத்தியில் ஓணம் பம்பர் லாட்டரி டிக்கெட்டிற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த ஆண்டு கேரளாவில் ஓணம் பண்டிகை செப்டம்பர் 14 முதல் 17 வரை நடைபெறுகிறது. வழக்கமாக கேரளாவில் ஒணம் பண்டிகை களை கட்டும். வயநாடு துயரத்தால் ஓணம் பண்டிகை வழக்கமான உற்சாகத்தை இழந்து காணப்படுகிறது. மான்சூன் பம்பர் குலுக்கல் முடிந்ததும் ஓணம் பம்பர் லாட்டரிக்கான அறிமுக விழாவும் கேரளா லாட்டரி அலுவலகத்தில் பிரமாண்டமாக நடைபெறும்.
இந்த ஆண்டு இந்த அறிமுக கொண்டாட்டமும் ரத்து செய்யப்பட்டது. எனினும், ரூ.25 கோடி பரிசுத்தொகை கொண்ட ஒணம் லாட்டரி டிக்கெட்டுகள் லாட்டரி கடைகளில் விற்பனை தொடங்கியது. தற்போது லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை அனல் பறக்க நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த டிக்கெட்டின் விலை ரூ.500 ஆகும். 90 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிட திட்டமிட்டுள்ளது. லாட்டரியில் முதல் பரிசாக ரூ.25 கோடியும் 2-வது பரிசாக 20 பேருக்கு தலா ஒரு கோடி ரூபாயும் மூன்றாவது பரிசாக 2 பேருக்கு 50 லட்சம் ரூபாயும் அளிக்கப்படுகிறது.
இந்த டிக்கெட்டிற்கான குலுக்கல் வரும் 09.10.2024 நடைபெறுகிறது. TA,TB,TC,TD,TE, TG, TH,TJ,TK, TL ஆகிய சீரியஸ்களில் டிக்கெட் விற்கப்படுகிறது. டிக்கெட் விற்பனை தொடங்கியது முதலே ராக்கெட் வேகத்தில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. 25 கோடி பரிசுத்தொகையை வெல்லும் அதிர்ஷ்டசாலி யாரோ என்று சேட்டன்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.
கேரள அரசின் லாட்டரி டிக்கெட்டுகளை வெளிமாநிலத்தில் விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. எனவே டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் கேரளாவில் நேரடியாக வாங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். வெளிமாநிலங்களில் கள்ளச்சந்தையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டால் அதற்கு பரிசு மறுக்கப்படும்.












Click it and Unblock the Notifications