சபரிமலை: வழக்கும் தொடர்ந்துவிட்டு, போராட்டமும் நடத்தி இரட்டை வேடம் போடுகிறதா ஆர்எஸ்எஸ்?
Recommended Video
சபரிமலை: வழக்கும் தொடர்ந்துவிட்டு, போராட்டமும் நடத்தி இரட்டை வேடம் போடுகிறதா ஆர்எஸ்எஸ்?
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பது கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் குற்றச்சாட்டு.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், மாதவிடாய் பருவ காலத்திலுள்ள பெண்கள் உட்பட, அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும், என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பு வெளியான பிறகு முதல் முறையாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.
போராட்டங்கள்
அப்போது பெண்களும் கோயிலுக்கு செல்ல முற்பட்டனர். அவர்களை ஆர்எஸ்எஸ் உட்பட இந்து அமைப்பினர் தடுத்து நிறுத்தினர்.பாஜக இளைஞர் அமைப்பினர் இன்று சபரிமலை அருகேயுள்ள நிலக்கல் பகுதியில் பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால், ஆர்எஸ்எஸ் ஒரு கால கட்டத்தில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து வந்துள்ளது.
நீதிமன்றம் அணுகிய ஆர்எஸ்எஸ் தலைவர்கள்
இதுகுறித்து கேரள அமைச்சர் சுரேந்திரன் கூறுகையில், 12 வருடங்கள் முன்பாக சங் பரிவார் தலைவர்கள்தான், அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தை அணுகினர். ஆனால் இப்போது பாஜக பந்தளத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் நடத்தப்பட்ட ரத யாத்திரைக்கு ஈடானது இது.
லாபம்
சங் பரிவார் அமைப்புகள், சபரிமலை விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய நினைக்கின்றன. தங்களுக்கு லாபம் கிடைக்குமா என்றுதான் பார்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இதனிடையே, சபரிமலை விவகாரத்தில் அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசிடம் பத்தினம்திட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி அன்டோ அந்தோணி கடிதம் எழுதியுள்ளார்.
தெற்கில் ஒரு அயோத்தி
சபரிமலையை இன்னொரு அயோத்தியாக மாற்ற பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் முயல்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அயோத்தி ராமர் கோயில் விவகாரமும் தேர்தல் காலங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் அஸ்திரமாக உள்ளது. அதேபோல கேரளாவில் கால் பதிக்க சபரிமலை விவகாரத்தில் விளையாடுவது வலதுசாரி அமைப்புகள்தான் என்ற குரல்கள் அதிகரிக்க துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.