வைகாசி மாத பூஜை... சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுவதையொட்டி, பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த திருவிழா நாட்களில் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.

இதே போல், ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. இவை தவிர பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மற்றும் விஷூ, ஓணம் பண்டிகை உள்பட விசேஷ நாட்களிலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார். அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை (புதன்கிழமை) அதிகாலை நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, களபாபிஷேகம், சகஸ்ரகலச பூஜை உள்பட அனைத்து பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். 5 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின் வருகிற 19-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
அதன்பிறகு பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு அடுத்த மாதம் 11-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். 12-ந் தேதி பிரதிஷ்டை சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications