பொன்னம்பல மேட்டில்.. ஜோதி வடிவில் காட்சியளிக்கும் ஐயப்பன்! மகரஜோதி தரிசனத்திற்கு குவிந்த பக்தர்கள்!
திருவனந்தபுரம்: கேரளாவின் சபரிமலையில் மகர விளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும். இந்நிலையில் இந்த ஆண்டு மகர ஜோதியை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்திருக்கின்றனர். ஜோதியை தரிசிக்க கூடாரமிட்டு காட்டுப்பாதையில் தங்கியுள்ளனர்.
சபரிமலையின் பொன்னம்பல மேட்டின் ஜனவரி 14ம் தேதியன்று மகர ஜோதி தெரியும். இந்த ஜோதியை காண தமிழ்நாடு மட்டுமல்லாது தென் மாநிலங்களின் பல மூலைகளிலிருந்தும் பக்தர்கள் வருவார்கள். கேரள மக்களின் வழக்கப்படி அவர்களுக்கு ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி மாதம் பிறக்கிறது. இந்த மாதத்தின் முதல் நாளில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் காட்சி தருகிறார் என்பது ஐதீகம்.
ஐயப்பனை தரிசிக்க பந்தளம் மகாராஜா மகர சங்கராந்தியின் முதல் நாளில் சபரிமலைக்கு செல்வார். ஐயப்பன் பந்தளம் ராஜ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். பின்னர்தான் சபரிமலைக்கு சென்று தெய்வமானார். எனவே பந்தளம் மகாராஜா ஒவ்வொரு ஆண்டும் சபரிமலைக்கு வரும் போது ஐயப்பனுக்கு அணிவிக்க ஆபரணங்களை கொண்டுவருவார். அதே போலவே தற்போதும் ஆபரணங்கள் ஆண்டுதோறும் ஜனவரி 13ம் தேதியன்று அரண்மனையிலிருந்து புறப்படும்.

ஆபரணம்
இந்த ஆபரணப்பெட்டியானது அடுத்த நாள் மாலை சரம் குத்தி வந்தடைந்து அங்கிருந்து மேளதாள முழக்கங்களுடன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் 18 படிகளை கடந்து கொண்டுவரப்படும். பின்னர் இப்பெட்டியில் உள்ள ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். அப்போதுதான் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் ஜோதி வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இது ஒரு கண்கொள்ளா காட்சியாகும். முழுவதுமாக இருட்டிய பின்னர் மலை எது? வானம் எது? என தெரியாமல் இருக்கும் நிலையில் பக்தர்களின் 'ஐயப்ப சரணம்' கோஷம் விண்ணை பிளக்க அதிரும் நேரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி ரூபத்தில் காட்சியளிப்பார்.

காட்டுப்பாதை
சபரிமலையில் தரிசனம் மேற்கொள்ள வருபவர்களுக்கு இந்த நிகழ்வுதான் முக்கியமானதாகும். எனவே ஜனவரி 13ம் தேதி முதல் பக்தர்கள் அதிக அளவில் காட்டு பாதையில் தங்க தொடங்கி விடுவார்கள். குறிப்பாக பெருவழிப்பாதை, வண்டிப்பெரியார் பாதை உள்ளிட்ட இடங்களிலிருந்து மகர ஜோதியை தெளிவாக தரிசிக்க முடியும் என்பதால் இந்த பாதையில் பக்தர்கள் கூடாரம் அமைத்து தங்கி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாது ஐயப்பனை தரிக்க பக்தர் இங்கு தங்கியுள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது.

வேறு வேறு
பொன்னம்பல மேட்டில் தெரியும் மகர ஜோதியும், மகர ஒளியும் வெவ்வேறு என்று சொல்லப்படுகிறது. மகர ஜோதி பொன்னம்பல மேட்டில் உள்ள பழங்குடியின மக்களால் ஐயப்பனை தரிசிக்க காலம் காலமாக ஏற்றப்பட்டு வருவதாகவும், ஆனால் மகர ஒளி என்பது மகர சங்கராந்தி தினத்தன்று பொன்னம்பல மேட்டின் உச்சியில் தெரியும் ஒரு நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது. சங்கராந்தி அன்று மாலை வேளையில் கிருஷ்ணப் பருந்து ஒன்று பொன்னம்பல மேடு பகுதியையொட்டியவாறு பறக்கும். அது பறந்து சென்ன பின்னர்தான் இந்த நட்சத்திரம் தெரியும். ஆனால் பலர் மகர ஜோதி, மகர விளக்கு என இரண்டையும் போட்டு குழப்பிக்கொண்டிருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர்.

பேட்டை துள்ளல்
அதேபோல இந்த மகர ஜோதிக்கு முன்னதாக சமரிமலையின் எருமேலியில் பேட்டை துள்ளல் நடைபெறுவது வழக்கம். பொதுவாக பெரும்பாலான நாட்களில் இந்த இடத்தில் பேட்டை துள்ளல் நடைபெறும் ஆனால் மகர ஜோதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் நிகழ்வுதான் மிகவும் பிரசித்தி பெற்றது. பேட்டை துள்ளல் அதனைத் தொடர்ந்து மகர ஜோதி என தொடர் நிகழ்ச்சிகளால் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. எனவே இவர்களை சமாளிக்க கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications