சபரிமலை தங்கக் கவசத்தில் 4 கிலோ தங்கம் மாயம்! தேவஸ்வம் போர்டுக்கு ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி!
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் துவாரபாலகர் சிலைகளின் தங்கக் கவசத்தில் 4 கிலோ தங்கம் காணாமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், மூன்று வாரங்களுக்குள் முழுமையான அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் நன்கொடையாக அளித்த தங்கக் கவசம், சென்னை ஸ்மார்ட் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டது. இந்த தங்கக் கவசம் 42 கிலோ எடையிலிருந்து பராமரிப்புப் பணிக்காக அகற்றப்பட்டபோது 38 கிலோ மட்டுமே இருந்தது.

எடை குறைந்த நிலையிலும் தங்கக் கவசங்கள் பராமரிப்புப் பணிக்காக சென்னைக்கு அனுப்பப்பட்டன. இதற்கான தேவசம்போர்டு சிறப்பு ஆணையாளரின் அனுமதி பெறப்படாமல் அனுப்பியதாக கூறப்பட்டதால், கேரள உயர்நீதிமன்றம் தேவசம்போர்டுக்கு கண்டனம் தெரிவித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், சபரிமலையில் விலைமதிப்புள்ள பொருட்களை அகற்றுவதற்கு முன் தேவசம்போர்டு சிறப்பு ஆணையாளரிடம் அனுமதி பெற வேண்டும் என்ற ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நினைவூட்டினர். இந்த நடைமுறை கடைபிடிக்கப்படாமல் செயல்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் தெரிவித்தனர்.
மேலும், தங்கக் கவசங்கள் எவ்வளவு தங்கத்தால் செய்யப்பட்டவை, சிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டதா அல்லது தங்கத் தகடுகள் பொருத்தப்பட்டதா என்பதில் ஆவணங்களில் தெளிவான விளக்கம் இல்லை என்று ஹைகோர்ட் தெரிவித்தது.
இதையடுத்து, சென்னையில் பராமரிப்புப் பணிக்காக அனுப்பப்பட்ட தகடுகளை உடனடியாக திரும்ப கொண்டு வந்து சபரிமலை சன்னிதானத்தில் பொருத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. வழக்கு செப்டம்பர் 17க்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 4 கிலோ தங்கம் காணாமல் போன விவகாரம் குறித்து தேவஸ்வசம் விஜிலென்ஸ் துறை மூன்று வாரங்களில் முழுமையான விசாரணை அறிக்கை அளிக்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications