சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.. ஆனால் இரண்டு நிபந்தனை!
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடம் மண்டலகால பூஜையில் பங்கேற்க நிபந்தனையுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படஉள்ளது. ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், கொரோனா இல்லை என்ற சான்று கட்டாயம் வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 24ம்தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் பெரிய கோயில்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. திருப்பதி ஏழுமலையான் கோயிலை தவிர அனைத்து பெரிய கோயில்களுமே மூடப்பட்டு உள்ளன.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயில் இந்த ஆண்டு நடைதிறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. மண்டல கால பூஜைகளின் போது கடும் நிபந்தனைகளுடன் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் 16ம் தேதி முதல் மண்டல காலம் தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் மண்டல கால பூஜையில் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். கூட்டத்திற்கு பின் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறுகையில், ''சபரிமலையில் மண்டல காலத்தை முன்னிட்டு கடும் நிபந்தனைகளுடன் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளோம். கொரோனா பரிசோதனை நடத்திய சான்றிதழ் உள்ள பக்தர்களுக்கு மட்டுமே தரிசம் செய்ய அனுமதி அளிக்கப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களை மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்












Click it and Unblock the Notifications