ஐயப்பனைக் காண வருங்கள்.. இன்று திறக்கப்படும் சபரிமலை சன்னிதானம்! எத்தனை நாட்கள் திறந்திருக்கும்?
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மண்டல பூஜைகள் நிறைவடைந்த நிலையில் கடந்த மாதம் நடை அடைக்கப்பட்டது. மாசி மாத பூஜைகள் நாளை தொடங்கவுள்ள நிலையில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதனையடுத்து சபரிமலைக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை கார்த்திகை மார்கழி மாதங்களில் நடைபெறுகிறது. இதை அடுத்து கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலை நோக்கி பயணம் மேற்கொண்டனர்.

கடந்த நவம்பர் மாதம் 16ஆம் தேதி மண்டல பூஜை தொடங்கி நிறைவடைந்தது. இதை அடுத்து டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் நடை திறக்கப்பட்டு மகர விளக்கு பூஜை நடைபெற்றது. சபரிமலையில் கடந்த 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற்றது.
பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை 'சுவாமியே சரணம் ஐயப்பா" என கோஷம் விண்ணைப் பிளக்க பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து 20ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து ஐயப்பனை வளர்த்த பந்தளம் மன்னர் சார்பாக பிரதிநிதியான ராஜ ராஜ வர்மன் ஐயப்பனை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி மன்னர் பிரதிநிதி முன்னிலையில் ஐயப்பனை யோக நிலையில் அமர்த்தி நடையை அடைத்து, பிறகு 18 படி வழியாக கீழே வந்து கோயிலுக்கான சாவியையும் இந்த ஆண்டு வருமானத்தை பந்தள மன்னர் குடும்பத்திற்கு ஒப்படைக்கும் வகையில் பண முடிப்பை வழங்கினார். அதையெல்லாம் கோயில் நிர்வாக அதிகாரியிடம் கொடுக்கும் மன்னர் பிரதிநிதி வரும் காலங்களில் பூஜைகளை தவறாமல் நடத்த வேண்டும் என கூறி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்ட திருவாபரண பெட்டியை பெற்றுக் கொண்டு சென்றார்.
தொடர்ந்து ஐயப்பனின் திருவாபரண பெட்டி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பந்தள அரண்மனையில் வைக்கப்பட்டது. இந்த நிலையில் மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்படுகிறது. இன்று மாலை சபரிமலை நடை திறக்கப்பட்டு, நாளை முதல் சன்னதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட இருக்கின்றனர்.
இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் சபரிமலையின் மேல் சாந்தியான அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து மட்டுமே வைப்பார். ஆனால் வேறு பூஜைகள் எதுவும் ஐயப்பனுக்கு இன்று நடக்காது. மீண்டும் நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் தொடங்கும். தொடர்ந்து இரவில் படி பூஜை நடைபெறுகிறது. இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.
தமிழ் மாதத்தில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை சன்னிதான நடை திறக்கப்படும் என கூறினாலும், மலையாள ஆண்டைப் பொறுத்தவரை இது கும்பம் மாதம் ஆகும். எனவே மண்டல பூஜைக்கு பிறகு வரும் இந்த பூஜை கும்ப பூஜை என அழைக்கப்படுகிறது. இந்த பூஜையானது வரும் 17ஆம் தேதி வரை நடக்கும் என்பதால் அன்று வரை கோவில் நடை திறந்திருக்கும் எனவும் பக்தர்கள் சந்நிதிக்கு பம்பையில் இருந்து அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications