Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் முதல்முறை.. கணவர் அந்த சீட்டை விட்டு இறங்கிய அடுத்த நிமிடம்.. தலைமைச் செயலாளரான மனைவி!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. கேரள அரசின் தலைமைச் செயலராகப் பணியாற்றிய வேணு ஐ.ஏ.எஸ், ஆகஸ்ட் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெற்ற நிலையில், அதே நாளில் தலைமைச் செயலராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார் அவரது மனைவியான சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்.

கேரள மாநில அரசின் தலைமைச் செயலாளராக இருந்தவர் டாக்டர் வி.வேணு. இவரது பதவிக்காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்த தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரனை தேர்வு செய்தது கேரள அரசு. இந்த சாரதா முரளிதரன் வேறு யாருமில்லை. தலைமைச் செயலாளராக இருந்த வி.வேணுவின் மனைவிதான் சாரதா முரளிதரன். வேணுவுக்குப் பிறகு தலைமைச் செயலாளராக அவரது மனைவி சாரதா முரளிதரன் பதவி ஏற்றுள்ளார்.

kerala chief secretary ias

கணவர் வகித்த பதவியில் மனைவி: கணவர் பதவி விலகிய உடனேயே, அவர் வகித்த அதே பதவியை, அதுவும் மாநிலத்தின் உயர்ந்த பதவியை அவரிடமிருந்து மனைவியே பெற்றுக்கொள்ளும் நிகழ்வு இதுதான் முதல் முறை. கேரளாவின் 49வது தலைமைச் செயலாளராக சாரதா முரளிதரன் பொறுப்பேற்றுள்ளார். கேரள மாநிலத்தில் 5-வது பெண் தலைமைச் செயலர் ஆகியிருக்கிறார் சாரதா முரளிதரன்.

திருவனந்தபுரம் தைக்காடு பகுதியைச் சேர்ந்த முரளிதரன் - கோமதி தம்பதியின் மகள் சாரதா. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் சாரதா முரளிதரன். சாரதா 1990 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. 1990 பேட்ச்சில் அகில இந்திய அளவில் சாரதா 52-ம் ரேங்க் பெற்றார். வேணு 26-ம் ரேங்க் பெற்றார். பின்னாளில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் காதல் கதையே சுவாரஸ்யமானது.

சுவாரஸ்ய காதல் கதை: ஐஏஎஸ் பயிற்சிக்காக கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருவரும் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அப்போது, சாரதா முரளிதரன் உடன் பயணித்தவருக்கு ரிசர்வேசன் சீட் கன்ஃபார்ம் ஆகவில்லை. அவருக்கு தனது சீட்டை கொடுத்துவிட்டு நியூஸ் பேப்பர் விரித்து கீழே தூங்கி உள்ளார் வேணு. அப்போதே அவர்மீது சாரதா முரளிதரனுக்கு அபிமானம் ஏற்பட்டுள்ளது. ஐஏஎஸ் பயிற்சிக் காலத்தில் வேணு தன் காதலை சாரதாவிடம் சொல்ல, அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். பின்னர் இருவரும் சப் கலெக்டராக இருந்த சமயத்தில் திருமணம் நடந்தது.

kerala chief secretary ias

தலைமைச் செயலர் வேணு: பின்னர், இருவரும் கேரள அரசில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தனர். இந்நிலையில், கேரள அரசின் தலைமைச் செயலர் ஆனார் வேணு. உள்ளாட்சித் துறையின் கூடுதல் தலைமை செயலராக பதவி வகித்தார் சாரதா முரளிதரன். இந்நிலையில் வேணு, பணி ஓய்வு பெறும் நிலையில், அவர் வகித்து வந்த அதே பதவிக்கு வந்துள்ளார் அவரது மனைவி சாரதா.

தலைமைச் செயலராக பொறுப்பேற்றார் சாரதா: வேணு, தலைமைச் செயலராக தான் வகித்து வந்த அதிகாரப்பூர்வ பொறுப்புகளை மனைவியான சாரதாவிடம் ஒப்படைத்துள்ளார். ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் வி வேணுவும், சாரதா முரளீதரனும் அருகருகே ஒன்றாக அமர்ந்தபடி இருக்கும் புகைப்படம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. வேணு தனது மனைவிக்கு தனது கடமைகளை மாற்ற, புதிய தலைமைச் செயலராக சாரதா பொறுப்பேற்றுக் கொண்டார்.

தலைமைச் செயலராகப் பதவியேற்ற சாரதா முரளிதரனுக்கு அவரது கணவரும், முன்னாள் தலைமைச் செயலருமான வேணு பூங்கொத்து கொடுத்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். "சாரதா என்னை விட நிர்வாக அனுபவம் உள்ளவராக இருப்பதாலும், பல கடினமான பொறுப்புகளை கையாண்டிருப்பதாலும், சாரதாவுக்கு இந்தப் பொறுப்பு பெரிய சவாலாக இருக்காது" எனத் தெரிவித்துள்ளார் வேணு.

அதே காரில்: 1990 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரிகளான வேணு மற்றும் சாரதா முரளிதரன் இருவருக்கும் ஒரு சில மாதங்களே வயது வித்தியாசம் உள்ள நிலையில், சாரதா முரளிதரனின் பதவிகாலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தோடு நிறைவடைய உள்ளது.

kerala chief secretary ias

கேரள தலைமைச் செயலாளருக்கு அரசின் 55 ஆம் எண் கார் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி தலைமைச் செயலாளராக வீட்டில் இருந்து காரில் புறப்பட்டுச் சென்றார் வேணு. மாலையில் அதே காரில் தலைமைச் செயலாளராக வேணுவின் மனைவி சாரதா முரளிதரன், வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.

பினராயி விஜயன் வாழ்த்து: கேரளாவில் பல்வேறு அரசு ஊழியர்கள் தம்பதிகளாக இருந்தாலும், மாவட்ட ஆட்சியர்களாக பணிபுரிந்து, கணவருக்கு பிறகு மனைவி தலைமைச் செயலாளராக பதவியேற்பது இதுவே முதல் முறை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பெருமிதத்தோடு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி சசிதரூர், "நான் அறிந்தவரை ஒரு மாநிலத்தின் தலைமைச் செயலாளராக கணவரைத் தொடர்ந்து மனைவி பொறுப்பேற்றிருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை. இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். அரசுக்கு பூங்கொத்து செலவு மிச்சம்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+