கேரளாவிலும் வந்தே பாரத் ரயில் மீது கல் வீச்சு.. நொறுங்கிய ஜன்னல் கண்ணாடிகள்.. பயணிகள் அதிர்ச்சி
திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் மாவட்டம் திருநாவாய் மற்றும் திருர் இடையே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்த போது கல் வீசப்பட்டது. இதில் வந்தே பாரத் ரயிலினின் சி4 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் நொறுங்கின.
நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் சென்னை - மைசூரு வழித்தடத்திலும், சென்னை - கோவை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் 15-வது வந்தே பாரத் ரயிலாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி திருவனந்தபுரம் - காசர்கோடு இடையே வந்தே பாரத் ரயில் சேவை துவங்கி வைக்கப்பட்டது. கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்பதால் இந்த ரயில் கேரள மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. முதல்நாளில் இருந்தே பயணிகள் ஆர்வத்துடன் இந்த ரயிலில் பயணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று மலப்புரம் மாவட்டம் திருநாவாய் மற்றும் திருர் இடையே வந்தே பாரத் ரயில் சென்று கொண்டிருந்த போது கல் வீசப்பட்டது. இதில் வந்தே பாரத் ரயிலினின் சி4 பெட்டியில் உள்ள கண்ணாடிகள் நொறுங்கின. அதிரஷ்டவசமாக இதில் பயணிகள் யாருக்கும் காயம் இல்லை.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் கல் வீசிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். வந்தே பாரத் ரயிலுக்கான பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்து இருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருர் ரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி போராட்டம் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், இந்த கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது.
வந்தே பாரத் ரயில் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் கண்டனத்திற்கு உரியது என்று கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சுரேந்திரன் தனது ட்வீட் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "மலப்புரம் மாவட்டத்தில் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.

இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம் என்பதோடு கேரளவிற்கே அவமானம் இழைக்க கூடியதும் ஆகும். முதல் நாளில் இருந்தே சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குற்றவாளிகளை போலீசார் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த 3 மாதங்களில் மட்டும் மூன்றாவது முறையாக வந்தே பாரத் ரயில் மீது கல் வீசப்படும் சம்பவம் நடைபெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications