வயநாடு நிலச்சரிவு: பினராயி விஜயனிடம் தமிழகத்தின் SNJ குழுமம் ரூ.1 கோடி வழங்கியது!
திருவனந்தபுரம்: கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக தமிழ்நாட்டின் SNJ குழுமம் சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. கேரளா முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்த SNJ குழுமத்தின் தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன், ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
கேரளாவின் வயநாடு மலைப் பகுதிகளில் சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. பல்லாயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருந்துயரில் சிக்கித் தவிக்கும் கேரளா மக்களுக்கு முதல் கரமாக தமிழ்நாடு அரசு கை கொடுத்தது. தமிழ்நாடு அரசு போல பல்வேறு மாநில அரசுகள், தொழில் நிறுவனங்கள் கேரளா அரசுக்கு நிவாரண நிதியை வாரி வழங்கி வருகின்றன.
இந்த வகையில் தமிழ்நாட்டின் SNJ குழுமமும் ரூ.1 கோடி நிவாரண நிதியை கேரளா வயநாடு துயரத்துக்காக வழங்கியது. இது தொடர்பாக SNJ நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் கேரள மாநிலம் பாதிக்கப்பட்டு, கடினமான காலத்தை கடந்து செல்லும் தற்போதைய சூழ்நிலையில், SNJ குழும நிறுவனங்களான நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
சிறிய அளவில் இருந்தாலும், நிலைமையை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதை உறுதிசெய்ய நாங்கள் எங்கள் உதவிக்கரம் நீட்டுகிறோம், எனவே மொத்தம் 1,00,00,000 ஒரு கோடி ரூபாய் காசோலையை கேரளாவின் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு குழும தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன் கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் நேரடியாக வழங்கினார் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications