வயநாட்டில் கேட்ட அந்த பெரும் சப்தம்.. நிலநடுக்கமா?.. நிபுணர்கள் விளக்கம்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், நிலச்சரிவைத் தொடர்ந்து இன்று காலை பூமிக்கடியில் இருந்து பயங்கர சப்தம் கேட்டதால் மக்கள் அலறியடித்து வீட்டைவிட்டு வெளியேறினர். இந்நிலையில், வயநாட்டில் கேட்ட அந்த பெரும் சத்தம் நிலநடுக்கமா என்பது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு கடந்த 29 ஆம் தேதி நள்ளிரவு 1 மணியளவில் ஏற்பட்டது. இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், வீடு, உடமைகள் என அனைத்தையும் இழந்தனர்.

வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 150க்கும் மேற்பட்ட உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர், தீயணைப்பு படையினர், மாநில மீட்புப் படையினர் உள்ளிட்டோர் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். வயநாடு மாவட்ட மக்களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுள்ளது இந்த நிலச்சரிவு சம்பவம். நூற்றுக்கணக்கானோர் தங்களது உயிரையும், ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவுகள், வீடுகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில்தான் வயநாடு மாவட்டத்தில் இன்று காலை திடீர் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வயநாடு மாவட்டம் அருகே அம்புக்குத்தி பள்ளத்தாக்கு மலைப் பகுதியில் உள்ள குறிச்சியார்மலை, பிணங்கோடு, அம்புக்குத்திமலை, அம்பலவாயல், எடக்கல் குகைப் பகுதிகளில் இன்று காலை 10.15 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நென்மேனி, அம்பலவாயல், வைத்ரி ஆகிய இடங்களில் பூமிக்கு அடியில் இருந்து பயங்கர நிலஅதிர்வு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து, அப்பகுதிகளைச் சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில், வயநாடு பகுதியில் நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட புவியியலாளர்கள் கூறியதாவது: நிலநடுக்கம் குறித்து கண்டறிவதற்கான உபகரணங்கள் மாவட்ட நிர்வாகத்திடம் போதுமான அளவில் இல்லை. மக்களிடமிருந்து நிலஅதிர்வு குறித்த தகவல்கள் பெறப்பட்டுள்ளன. பூமிக்கடியில் ஏற்பட்ட சப்தம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். ஆனால், இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை நில அதிர்வு எதுவும் ஏற்படவில்லை.
சுகந்தகிரி போன்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள மக்கள் குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம். உள்ளூர் மக்களும் தங்களுக்கு வித்தியாசமான சப்தம் கேட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், சப்தம் கேட்கும் பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல முதல்வர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications