500 வீடுகள் எங்கே? மிஞ்சி நிற்கும் 40 வீடுகள்! 4,833 பேர் பரிதவிப்பு! மூடியது முண்டக்கை!
சென்னை: கேரள மாநிலம் முண்டக்கையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 500 வீடுகள் அடித்துக் கொண்டு சென்று விட்டதாகவும் மீதி 40 வீடுகள் மட்டுமே தற்சமயம் எஞ்சி இருப்பதாகவும் நேரடி கள ஆய்வு செய்திகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மலைப் பகுதிகளான சூரல்மலா, முண்டக்கை, பூஞ்சேரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 6 நாட்களுக்கு முன்பாக ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் நிலைமை என்னவானது என்பது இதுவரை தெரியவில்லை.

இந்த நிலச்சரிவைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் எனக் கேரளா முதல்வர் பினராயி விஜயன், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் வயநாடு தொகுதி முன்னாள் எம்பியுமான ராகுல் காந்தி உள்ளிட்டோர் வலியுறுத்தி இருந்தனர். இதனிடையே பாஜக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி, இந்த நிலச்சரிவைத் தேசியப் பேரிடராக அறிவிப்பது குறித்து சட்டரீதியாக மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது எனத் தெரிவித்திருந்தார்.
ஆனால் முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான வி.முரளீதரன், வயநாடு நிலச்சரிவைத் தேசியப் பேரிடராகவே அறிவிக்க முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இவரது பேச்சு கேரள மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில் கடந்த 6 நாட்களாக முண்டக்கை பகுதியில் நடைபெற்று வந்த மீட்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி முண்டக்கை தான். இங்கு நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னதாக கிட்டத்தட்ட 540 வீடுகள் இருந்துள்ளன. ஆனால், இப்போது அதில் 40 வீடுகள் மட்டுமே எஞ்சியுள்ளன. மீதி 500 வீடுகள் மண்ணுக்குள் புதைந்துவிட்டன. அல்லது சில வீடுகள் ஆற்றுப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. கட்டுக்கடங்காத வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் இந்த முண்டக்கை பகுதியே பெரிய பள்ளத்தாக்காக மாறியுள்ளது. சுமார் 200 அடி பள்ளமாக இந்தக் குடியிருப்பு பகுதி மாறியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தேசிய பேரிடர் குழுவினர் இந்தப் பகுதியில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வந்தநிலையில், அப்பணிகள் இப்போது முடிவை எட்டியுள்ளன. தெர்மல் ஸ்கேன் என்ற தொழில்நுட்ப உதவியுடன் நடத்தப்பட்ட சோதனையில் எங்கும் சடலங்கள் புதைந்து கிடக்கவில்லை என்பதையும் உறுதி செய்துள்ளனர். முண்டக்கைக்கு மேலேதான் பூஞ்சேரி மட்டம் என்ற கிராமம் உள்ளது.
ஆனால், இந்தப் பகுதிக்குள் மீட்புப் படையினர் செல்ல முடியாத அளவுக்குத் தடைகள் இருந்து வந்தன. அவை அனைத்தையும் தாண்டி நேற்றுதான் மீட்புப் படையினர் உள்ளே சென்றுள்ளனர். அந்தக் கிராமத்திற்குச் செல்லும் பாதை முழுமையாக அடைக்கப்பட்டுவிட்டது. கடந்த 3 நாட்களாக 5 ஜேசிபிகளின் உதவியுடன் பாதையை அமைத்து மீட்புக்குழுவினர் உள்ளே சென்றுள்ளனர்.
சூரல்மலா மற்றும் முண்டக்கை பகுதிகளில் வாழ்ந்துவந்த சுமார் 180 பேரின் நிலைமை என்ன ஆனது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் தெரிவித்துள்ளார். மேலும் அடையாளம் காண முடியாத 31 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கடந்த 2019இல் இங்கே உள்ள புதுமலாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் மட்டுமே காணாமல் போய் இருந்த நிலையில், இப்போது அப்படியே பாதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது.
இதனிடையே பா சமூக விரோத கும்பல் இந்த இயற்கை பேரிடரைச் சாதகமாகப் பயன்படுத்திப் பாதிக்கப்பட்ட வீடுகளில் உள்ள பொருட்களைத் திருடி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்துள்ளதால், புதியதாக அமைக்கப்பட்டுள்ள பெய்லி பாலத்தைக் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை 1,500 பேர்கள் மட்டுமே கடக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலியார் ஆற்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மட்டும் 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம் பலி எண்ணிக்கை 385 ஆக உயர்ந்துள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வமான அரசு செய்தியோ இதுவரை 221 உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. அதேபோல் 166 உடல் பாகங்களும் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முண்டக்கை மற்றும் சூரல்மலா, அட்டமலா ஆகிய மூன்று பகுதிகளில் மட்டும் மொத்தம் 4,833 மக்கள் இந்த நிலச்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மலையாள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications