Dileep: ஆதாரம் எங்கே? நடிகை பலாத்கார வழக்கில் திலீப் விடுதலை ஏன்? கேரள நீதிமன்றம் சொன்ன மிக முக்கிய பாயிண்டு
திருவனந்தபுரம்: நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில், எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹனி எம்.வி. வர்கீஸ் இன்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 8வது குற்றவாளியான நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் ஏன் விடுவிக்கப்பட்டார்.. இதற்கு நீதிபதி கூறிய காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
கடந்த 2017ம் ஆண்டு கேரளாவில் பிரபல நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்டார். 2017 பிப்ரவரி 17ம் தேதி அந்த நடிகை திருச்சூரில் இருந்து படப்பிடிப்புக்குச் சென்றபோது இந்தக் கொடூரம் அரங்கேறியது. திருச்சூரில் இருந்து நடிகை படப்பிடிப்புக்குச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போதே சம்பந்தப்பட்ட நடிகை இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகாரளித்தார்.

நடிகை பலாத்கார வழக்கு
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கேரளா போலீசார் விசாரணையை நடத்தினர். அதில் பல்வேறு தரப்பினரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பாகப் பிரபல மலையாள நடிகர் திலீப் இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் இன்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திலீப் விடுதலை
அதில் நடிகர் திலீப் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. அதேநேரம் முதல் ஆறு குற்றவாளிகளான பல்சர் சுனில் உள்ளிட்டோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். முதன்மை குற்றவாளி பல்சர் சுனி, மார்ட்டின் ஆண்டனி (A2), பி. மணிகண்டன் (A3), வி.பி. விஜேஷ் (A4), எச். சலீம் (A5) மற்றும் பிரதீப் (A6) ஆகியோர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தண்டனை விவகாரம் வரும் 12ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
காரணம் என்ன!
அந்த நடிகைக்கும் திலீப்பிற்கும் இடையே நீண்ட காலமாக முன்பகை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் அந்த நடிகையை அவமானப்படுத்தவே திலீப் இதைச் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்காக பல்சர் சுனிலுக்கு 1.5 கோடி ரூபாய் வழங்குவதாகவும் திலீப் கூறியதாக அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது. இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டினார்.
முதல் ஆறு குற்றவாளிகளும் பாலியல் வன்கொடுமையில் நேரடியாக ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று பேர் அப்ரூவர்களாக மாறியனர். மேலும், பலாத்காரச் சம்பவத்தை வீடியோ எடுத்த பல்சர் சுனில் அதை இரு வழக்கறிஞர்களிடம் கொடுத்துள்ளார். அந்த மொபைல் போனைப் பெற்றதாகக் கூறப்படும் இரண்டு வழக்கறிஞர்களும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஆதாரம் எங்கே
குற்றத்திற்கான முக்கிய ஆதாரமான அந்த மொபைலை போலீசாரால் கண்டுபிடிக்கவே முடியவில்லை.. கொச்சி பேக்வாட்டர்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் போலீசாரால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த செல்போன் வழக்கில் மிக முக்கிய சாட்சியாக இருந்த நிலையில், அதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
எர்ணாகுளம் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியபோது, திலீப் மற்றும் பல்சர் சுனில் உள்ளிட்ட அனைத்துக் குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். முக்கிய குற்றவாளிகள் அனைவரும் சம்பவம் நடந்த உடனேயே கைது செய்யப்பட்டனர். நடிகர் திலீப் 2017 ஜூலையில் கைது செய்யப்பட்டார். அவர் சுமார் 85 நாட்கள் சிறையில் இருந்தார். அதன் பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. கொரோனா உள்ளிட்ட பல காரணங்களால் இந்த வழக்கு விசாரணை தாமதமான நிலையில், இப்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications