ஓடிவந்த மகராசி.. நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் அளிக்கும் தங்கம்!

Subscribe to Oneindia Tamil

வயநாடு: கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவம் அப்பகுதி மக்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உறவினர்கள், இருப்பிடம், உடமைகள் என அனைத்தையும் இழந்துள்ளனர்.

தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானம் அளிக்க இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் முன்வந்துள்ளார். இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயநாடு மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பேய் மழை கடந்த 30ம் தேதி கொட்டித் தீர்த்தது. அப்போது, நள்ளிரவு 1 மணியளவில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி உள்ளிட்ட இடங்களில் அடுத்தடுத்து அதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில், முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட கிராமங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் அடித்து செல்லப்பட்டன. நூற்றுக்கணக்கான மக்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்தனர். எங்கு பார்த்தாலும் மரண ஓலமும், சடலங்களுமே தென்படுகின்றன.

Kerala Wayanad landslide

தொடர்ந்து, இன்று 5வது நாளாக மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வயநாட்டின் முண்டக்கை, சூரல்மலை ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 310க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

இன்னும் 200க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் விரைந்து சென்று மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வீடு, பொருள்கள், உறவினர்கள் என அனைத்தையும் இழந்து என்ன செய்வதென்றே தெரியாமல் அப்பகுதி மக்கள் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தானமளிக்க முன்வந்துள்ள சம்பவம் அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள உப்புதாரா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பாவனா. இவரது கணவர் சஜின் பராகரா என்பவர் நேற்று முன்தினம் தனது பேஸ்புக் பக்கத்தில் போட்ட பதிவு ஒன்றில், "பச்சிளம் குழந்தைகள் யாருக்காவது தாய்ப்பால் தேவைப்பட்டால் என்னை அணுகுங்கள். என் மனைவி தாய்ப்பால் தானம் அளிக்கத் தயாராக உள்ளார்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து, இளம்தாய் பாவனா கூறியதாவது: வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து அறிந்தவுடனேயே, இச்சம்பவத்தில் தாயை இழந்த பச்சிளம் குழந்தைகள் தாய்ப்பாலுக்கு என்ன செய்வார்கள் என்றுதான் நான் அதிகம் வேதனைப்பட்டேன்.

பெற்றோரை தவறவிட்ட, இழந்த குழந்தைகள் குறித்தும் நான் மிகுந்த கவலை அடைந்தேன். எனக்கு 4 வயதில் ஒரு குழந்தையும், 4 மாதங்களேயான ஒரு குழந்தையும் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனவேதனையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றை எல்லாம் யோசித்துதான் தாய்ப்பால் தானம் வழங்கலாம் என்று முடிவு செய்தேன். இதுகுறித்து எனது கணவரிடம் பேசியபோது அவர் என் முடிவுக்கு முழு ஆதரவும் அளிப்பதாகக் கூறினார் என்று தெரிவித்துள்ளார்.

சஜின் பேஸ்புக்கில் தாய்ப்பால் தானம் குறித்த பதிவு போட்டவுடனேயே, அவருக்கு வயநாட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து, பாவனாவும், சஜினும் நேற்று முன்தினம் இரவே வயநாடு புறப்பட்டுச் சென்றுள்ளனர். வயநாட்டில் உள்ள மேப்பாடி முகாமில் தங்கி பச்சிளம் குழந்தைகளுக்கு நேற்று முழுவதும் பாவனா தாய்ப்பால் தானம் கொடுத்துள்ளார். எத்தனை நாட்கள் தேவைப்படுகிறதோ, அத்தனை நாட்களும் அப்பகுதியிலே தங்கியிருக்க அந்த தம்பதி முடிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+