ஏழைகளின் ஊட்டி! ராமர், சீதை, ராவணன் தங்கிய வனப்பகுதிக்கு போங்க! அடிக்கிற வெயிலுக்கு குளிர்காயலாம்!
திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ள நெல்லியம்பதி மலை பகுதி, தற்போது தமிழகத்தில் உள்ள கோடை வெயிலுக்கு இதமளிப்பதாக அமையும்.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடை குளுகுளுவென ஆக்க தமிழகத்தில் நிறைய மலைபிரதேசங்கள் இருக்கும் போதிலும் அங்கெல்லாம் தற்போது கூட்டம் நிரம்பி வழிகிறது.

தேர்தலுக்காக ஏப்ரல் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் பலர் ஓட்டு போடாமல் தங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் கொடைக்கானலில் குவிந்தனர். இதனால் அங்கு பல கி.மீ. தூரத்திற்கு வாகனங்கள் குவிந்து கிடக்கின்றன.
கொடைக்கானலுக்குள் செல்லவே முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே போல்தான் ஊட்டி, ஏற்காடு, ஏலகிரி உள்ளிட்ட மலை பிரதேசங்களும்! இதனால் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் தகிக்கும் வெயிலால் அங்கிருக்கும் சிறிய செயற்கை தண்ணீர் விளையாட்டுகளை நோக்கி மக்கள் படையெடுத்து வருகிறார்கள்.
இப்படி தடுக்கி விழுந்தால் கொடைக்கானல், ஊட்டி, ஏற்காடு, மூணாறு என செல்கிறார்கள். இதையெல்லாம் விட ஒரு சூப்பர் ஸ்பாட் இருக்கிறது. அதுதான் நெல்லியம்பதி மலைகள். இது பாலகாட்டிலிருந்து 52 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த மலையின் உயரம் 467 மீட்டர் முதல் 1572 மீட்டர் வரை ஆகும்.

பசுமையான காடுகள், ஆரஞ்சு தேயிலை, காபி மற்றும் மசாலா தோட்டங்கள் நிறைந்திருக்கும். இதை ஏழைகளின் ஊட்டி என்றும் அழைக்கலாம். இது சிற்றூர் தாலுக்காவுக்கு உள்பட்டதாகும். போதுந்திரி அணை இந்த பகுதியில் அமைந்துள்ளது. இந்த அணை 19ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
போதுந்திரி அணையானது இந்தியாவின் பழமையான அணைகளில் ஒன்று. இது 5470 ஹெக்டேர்கள் பரப்பளவில் பாசன பயன்பாட்டுக்காகவும் குடிநீர் தேவையை நிறைவு செய்யவும் அமைந்துள்ளது. இங்கு படகு சவாரி செய்யலாம். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை படகு சவாரிக்கு அணுகலாம்.
நெல்லியம்பதியிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இங்கு ராமர் , சீதை , லட்சுமணன் ஆகியோர் வனவாசம் வந்த போது தங்கியிருந்ததாக நம்பப்படுகிறது. இந்த பகுதிக்கு சீதாரகுண்டு என்றும் பெயர் உள்ளது. இந்த இடத்தில் ஏலக்காய், மிளகு, காபி, தேயிலை உள்ளிட்ட தோட்டங்கள் உள்ளன.

மேலும் கூஸ்பெர்ரி பழங்களும் அதிகம் கிடைக்கும். இந்த பகுதியில் பார்க்க வேண்டிய இடம் என்றால் கேசவன் பாறை ஆகும். இந்த பாறையில் திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில் வியூபாயிண்ட் அருமையாக இருக்கும். இந்த இடம் வனப்பகுதியும் அருவிகளும் கொண்டதாகவே உள்ளது. நென்மாராவிலிருந்து நெல்லியம்பதிக்கு மலை வழி சாலை வழியாக செல்ல வேண்டும்.
தேயிலை தோட்டங்கள் வழியாக சென்றால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட காரப்பாரா தொங்கு பாலம் இருக்கிறது. இங்கு ஒரு நீர்வீழ்ச்சியும் உள்ளது. மாலை நேரத்தில் இந்த காட்டில் மிளிரும் ஆயிரக்கணக்கான மின்மினி பூச்சிகள் அப்படியே ஏதோ லைட்டு போல் இருக்கும். இந்த நெல்லியம்பதிக்கு வர வேண்டும் என்றால் பாலக்காடு அல்லது நென்மாராவுக்கு வந்துவிட்டு அங்கிருந்து டிராவல்ஸ் காரில் செல்லலாம். இந்த மலை பகுதிகளுக்கு வருவதற்கு மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை உகந்த காலமாகும்.












Click it and Unblock the Notifications