கோவை பயணிகளுக்கு அதிகாலை 2 மணிக்கு நடந்த ஷாக்.. வட மாநில டூர் போறீங்களா.. வீடியோ பாருங்க!
கோவை: கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகளின் பேருந்தின் பின்பக்கம் ஏறி கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி வீடியோவும் வெளியாகி உள்ளது, எனவே பேருந்துகளில் வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோர் மிக கவனமாக இருக்க வேண்டும்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை அடுத்த வாகராயம்பாளையம் புதூர், சந்திராபுரம் பகுதியைச்சேர்ந்த சுமார் 50 பேர், கடந்த மே 28ஆம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோயில் உள்ளிட்ட ஆன்மீக தலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்,

தனியார் சுற்றுலா பேருந்தில் சுற்றுலா சென்ற அவர்கள், காசி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று விட்டு நேற்றைய முன்தினம் (ஜூன் 7) இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றிருக்கிறார்கள்.
இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் குஜராத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அதிகாலை 4 மணியளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே நின்றபோது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த ஓட்டுநர் மற்றும் உதவியாளர்கள் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்திருக்கிறார்கள். அப்போது சிலரின் உடமைகள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்துள்ளனர்.
கோவையில் இருந்து வடமாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பேருந்தின் பின்பக்கம் வழியாக ஏறி, உடமைகளை கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது #coimbatore #northindia #tour pic.twitter.com/NvV57mLoC0
— velmurugan (@velmurugantheni) June 9, 2023
அதில், அதிகாலை 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும்போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவர், ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதாகவும் காட்சிகள் இருந்தது.

அத்துடன் ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு அந்த கொள்ளையர் மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது மேலும், இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் கூறுகையில், "கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களுக்கு சென்றோம்.காசி, உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று விட்டு ஒடிசாவில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்தது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தோம். இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளார்கள்,.

குஜராத்தை அடைந்ததும் தங்கு விடுதிக்குச் சென்றபோது இந்த விஷயம் எங்களுக்கு தெரிய வந்தது. மேலும், துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிர்ஷ்டவசமாக பணம் மற்றும் பொருட்கள் பேருந்தின் உள் பகுதியில் வைத்ததால் அவை தப்பியது.சினிமாவில்தான் இது போன்ற காட்சிகளைப் பார்த்தோம். ஆனால், தற்போது நாங்கள் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடந்தது எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றார். வடமாநிலங்களுக்கு சுற்றுலா செல்லும் பேருந்துகளில் மட்டுமின்றி, லாரிகளிலும் கொள்ளை அடிப்பது அடிக்கடி நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications