குற்றாலத்தில் கண்ணாமூச்சி காட்டும் அருவிகள்.. ஏமாறும் சுற்றுலாப்பயணிகள்.. வியாபாரிகள் வேதனை
தென்காசி: நடப்பு ஆண்டு குற்றால சீசன் மிகவும் தாமதாக துவங்கிய நிலையில், அடிக்கடி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் குளியல் போட வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைவதையும் காணமுடிகிறது. தாமதமாக தொடங்கினாலும் தொடர்ந்து குற்றால அருவி ஆடும் கண்ணாமூச்சியால் வியாபாரிகளும் வேதனை அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தென்காசி மாவட்டத்தில் குற்றாலம் உள்ளது. இங்குள்ள இயற்கை சூழலும் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் நீரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும், ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்டும். குற்றாலத்தில் உள்ள நீர் வீழ்ச்சியில் ஆனந்த குளியலை போடுவதற்காக தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்து கூட சுற்றுலாப்பயணிகள் வருகை தருவதுண்டு.

வழக்கமாக ஜூன் தொடக்கத்திலேயே குற்றால சீசன் களை கட்டிவிடும். இதனால் ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே குற்றால சீசனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆனால், தென்மேற்கு பருவமழை துவங்க தாமதம் ஆனதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை இல்லாததாலும் குற்றால சீசன் தொடங்கவில்லை. வெறும் பாறைகளே தென்பட்டன. இதனால், குற்றால சீசனை எதிர்பார்த்து இருந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், ஜூன் 3-வது வாரத்தில் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. குற்றாலத்தில் குளிர்ந்த காற்று மற்றும் சாரல் மழையோடு இதமான சூழல் நிலவியது. குற்றாலத்தின் மெயின் அருவியிலும் லேசாக தண்ணீ கொட்ட தொடங்கியது. குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் விழுந்ததால் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். ஆனால், சிறிது நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்ற்றுலாப்பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் குற்றால அருவிகளில் நீர் வரத்து குறைந்தது. இதனால், ஆர்வத்துடன் குளிக்க வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். பின்னர் நேற்று மதியம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதியில் கனமழை கொட்டியது. இதனால், அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, மெயின் அருவி ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று நீர் வரத்து குறைந்து இருப்பதால் அதிகாலை முதல்சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு குற்றால சீசன் மிகவும் தமதமாக துவங்கியதோடு, அருவிகளில் திடீர் திடீர் என வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாலும் சுற்றுலாப்பயணிகள் வந்து பார்த்து விட்டு ஏமாற்றம் அடைந்து செல்லும் நிலமையும் உள்ளது.

தொடர்ந்து கண்ணாமூச்சி காட்டும் சீசனால் வியாபாரிகளும் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனினும் இன்று காலை முதலே குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. தென்காசி பகுதி மட்டும் இன்றி வெளி மாவட்ட பயணிகளும் குற்றாலத்திற்கு வந்து ஆனந்த குளியல் போட்டுவிட்டு அங்குள்ள இதமான சூழலை அனுபவித்து செல்கிறார்கள்.












Click it and Unblock the Notifications