கொடைக்கானல் மலையில் பிரேக் பிடிக்காத கார்.. 100 அடி பள்ளத்தில்.. சட்டென டிரைவர் செய்ததை பாருங்க
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பாதையில் வேகமாக வந்த கார் பிரேக் பிடிக்காததால் தாறுமாறாக ஓடியது. சாலையில் 100 அடி பள்ளத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலம் ஆகும். இங்குள்ள சிவனடி சாலையை சேர்ந்த 40 வயதாகும் பாண்டி என்பவர் அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு தனது காரில் சென்றுள்ளார். பின்னர் உறவினர் வீட்டில் இருந்து, தனது வீட்டுக்கு பாண்டி திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கொடைக்கானலில் உள்ள சிவனடி சாலை சற்று இறக்கமான மலைப்பாதை ஆகும். எனவே காரின் வேகத்தை குறைப்பதற்காக பாண்டி பிரேக் பிடித்துள்ளார். அப்போது திடீரென பிரேக் பிடிக்காமல் போயிருக்கிறது. இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பாண்டி அதனை கட்டுக்குள் கொண்டுவர போராடிக்கொண்டிருந்தார். ஆனால் பாண்டியால் முடியவில்லை. கார் தறிகெட்டு வேகமாக ஓடியது. இதனைக்கண்டு அந்த வழியாக நடந்து சென்ற பொதுமக்கள், அலறியடித்தபடி தப்பித்து ஓடினார்கள்.
இதற்கிடையே பாண்டியின் கார் இறக்கமான சாலையில் 100 அடி பள்ளத்தில் வேகமாக பாய்ந்து வந்தது. அப்போது பூட்டிய நிலையில் இருந்த தண்ணீர் கேன் விற்பனை கடையின் ஷட்டரை உடைத்துக் கொண்டு கார் உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் கடையில் இருந்த தண்ணீர் கேன்கள் அனைத்தும் சேதம் அடைந்தன..
கடையின் ஷட்டர் உடைந்து விழுந்ததில் காரின் பின்பக்க கண்ணாடி முழுமையாக நொறுங்கியது. காரின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தது. தண்ணீர்கேன்கள் மீது மோதி நின்றதால் நல்லவேளையாக காரை ஓட்டி வந்த பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் கிச்சைக்காக சேர்த்தனர்.
மலைப்பாதையில் தறிகெட்டு ஓடிய கார், கடைக்குள் புகுந்த சம்பவம் கொடைக்கானல் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கார் மின்னல் வேகத்தில் கடைக்குள் புகுந்த காட்சி, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ 'வாட்ஸ்-அப்' உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications