கொடைக்கானல் போக இதுதான் சரியான நேரம்.. சும்மா கிளைமேட் அள்ளுது! வண்டியை விட்ற வேண்டியது தானே!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அதிகாலை முதல் அடர்ந்த பனி மூட்டதுடன் கூடிய லேசான சாரல் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனாலும், தற்போது இருக்கும் கிளைமேட் மிகவும் அருமையாக இருப்பதாகக் கூறுகின்றனர் சுற்றுலாப் பயணிகள்..
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இயற்கை சூழ்ந்த பகுதிகளை கண்டு ரசிப்பதோடு அங்கேயே தங்கி இருந்து விடுமுறையை கழித்து வருகின்றனர். கொடைக்கானல் மலைப்பகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி இருப்பதால் இங்கு ஏராளமான வனவிலங்குகள் வசிக்கின்றன.

கடந்தாண்டு டிசம்பர் மாத தொடக்கம் முதல் தொடர்ந்து மழை பெய்ததின் காரணமாக கொடைக்கானலில் உறைப் பனி சீசன் சற்று தாமதமாக தொடங்கியது. குறிப்பாக இன்று காலை நட்சத்திர ஏரியில் நீர் ஆவியாகி மேலே பறந்து செல்லும் ரம்யமான காட்சி காண்போரை கவர்ந்து இழுத்தது. அதேபோல கீழ் பூமி, ஜிம்கானா உள்ளிட்ட பகுதிகளில் உறை பனியானது தற்போது தொடங்கியுள்ளது.

மேலும் இங்குள்ள பசுமையான புல்வெளிகளில் ஆங்காங்கே வெள்ளை கம்பளம் விரித்தது போல கொட்டி கிடக்கும் உறை பனி கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. மேலும், தற்போது பொங்கலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஆயிரக்கணக்கான பயணிகள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தற்போது கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சியிலிருந்து நட்சத்திர ஏரி வரை சுமார் 3 கிலோமீட்டர் அளவில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் தனியார் விடுதியில் மற்றும் உணவு விடுதிகளை முறையான வாகனங்கள் நிறுத்துமிடம் இல்லாத காரணத்தால் சுற்றுலா பயணிகள் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்துவதாலும் வாகனங்கள் நெரிசல் ஏற்படுகிறது.

இந்நிலையில், கொடைக்கானலில் அதிகாலை முதல் அடர்ந்த பனி மூட்டதுடன் கூடிய லேசான சாரல் மழை, சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். கொடைக்கானலில் கடந்த சில நட்களாகவே மிதமான வெப்பம் நிலவி வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் நகரின் முக்கிய பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டதுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக பேருந்து நிலையம், ஏரி சாலை, மூஞ்சிக்கல், சீனிவாசபுரம் ஆகிய பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே தங்களது வாகனங்களை மெதுவாக இயக்கி வருகின்றனர். அதே போல காலை நேரத்திலேயே ஏரி சாலை பகுதியில் தரை இறங்கிய பனி மூட்டம் நிலவி வரும் நிலையில் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து வந்தாலும் , வேறு சுற்றுலா இடங்களுக்கு செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

அதே நேரத்தில் தற்போது இருக்கும் கிளைமேட் மிகச் சிறப்பாக இருப்பதாக கூறுகின்றனர் சுற்றுலாப் பயணிகள். வழக்கமாக காஷ்மீர் போன்ற பகுதிகளில் தான் இது போன்ற கடும் குளிரை பார்க்க முடியும் ஆனால் தற்போது கொடைக்கானலில் அதுபோன்ற கிளைமேட் இருப்பது ரசிக்க வைக்கிறது. ஆனால் மற்ற இடங்களுக்கு தான் செல்ல முடியவில்லை. அறைகளிலேயே முடங்கியுள்ள நிலை ஏற்பட்டுள்ளது என்றனர்.












Click it and Unblock the Notifications