கொடைக்கானலுக்கு புதிய பாதை.. தடை கோரிய வழக்கு.. மதுரை ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வத்தலக்குண்டு வழியாக ஒரு(பிரதான) பாதையும், பெரியகுளம் வழியாக ஒரு பாதையும், பழனி வழியாக ஒரு பாதையும் உள்ளது. ஆனால் எல்லா பாதையும் பெருமாள் மலையில் முடிந்துவிடும். அங்கிருந்து குறுகிய சாலையில் வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக கொடைக்கானல் நகருக்கு போக முடியும். இதனால் வில்பட்டி, புலியூர் வழியாக கொடைக்கானலில் புதிய சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தடை கோரிய வழக்கில் ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச அளவில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக உள்ளது. இந்த சுற்றுலா தலத்திற்கு தற்போதைய நிலையில் வத்தலக்குண்டு, காட்ரோடு (தேவதானப்பட்டி) வழியாக மெயின் பாதை உள்ளது. இந்த பாதை வழியாகவே சென்னை, மதுரை, திண்டுக்கல், பெங்களூர் உள்பட பெரும்பாலான மக்கள் வருவார்கள். இது பெரிய பாதையாகும். அடுத்ததாக பழனி வழியாக ஒரு பாதை உள்ளது. கோவை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் மக்கள் பழனி பாதையில் வருவார்கள். பழனி பாதை சற்று சவாலானது.
பேருந்துகள் செல்ல முடியும் என்றாலும், பாதை சிறிய அளவில் இருக்கும். அடுத்ததாக பெரியகுளம், கும்பக்கரை அருவி வழியாக ஒரு செங்குத்தான பாதை உள்ளது. கனரக வாகனங்கள் செல்வதற்கு உகந்த பாதை இல்லை.. கார்கள், இருசக்கர வாகனங்களில் செல்வோர் போக முடியும். மிகஅதிகமான கொண்டை ஊசி வளைவு கொண்ட பாதையாகும். இந்த பாதைகள் எல்லாமே பெருமாள் மலையில் முடிந்துவிடும்.
அங்கிருந்து வெள்ளிநீர் வீழ்ச்சி வழியாக மட்டுமே கொடைக்கானலுக்கு வாகனங்கள் நுழைய முடியும். இந்நிலையில் பழனி வழியாக வருவோர், பெருமாள் மலைக்கு பக்கத்தில் இன்னொரு வழியாக வில்பட்டியை அடைந்து, அந்த வழியாக கொடைக்கானலுக்கு செல்ல பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாதை அமைந்தால் நகருக்குள் நெரிசல் குறையும் என்று கூறப்படுகிறது.இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த அசோகன், மதுரை உயர்நீதிமன்றத்தில் இந்த திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானலில், போக்குவரத்தை சரி செய்ய மாற்று வழி ஏற்படுத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழக சுற்றுலாத்துறை ஆணையரின் தலைமையில் அனைத்து அலுவலர்களை கொண்ட கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில், கொடைக்கானல் முதல் வில்பட்டி-கோவில்பட்டி- புலியூர் வழியாக மாற்றுப்பாதை அமைக்க முடிவு செய்து உள்ளனர்.
இந்த வில்பட்டி-கோவில்பட்டி- புலியூர் வழியாக மாற்றுப்பாதை சாலையானது, சுற்றுச்சூழல் உணர்திறன் மிக்க பகுதிக்குள் வருகிறது. ஏற்கனவே வில்பட்டி- கோவில்பட்டி- நார்தான்தொட்டி-பெருமாள் மலை ஆகிய பகுதியில் சாலை அமைக்க பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது முடிவு செய்யப்பட்டு உள்ள வழியில் எவ்விதமான ஆய்வும் செய்யாமல் அவசரமாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இது இயற்கை பாதுகாப்புக்கு ஆபத்தானது. இதுகுறித்து அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கொடைக்கானலில் இருந்து வில்பட்டி- கோவில்பட்டி- புலியூர் ஆகிய சுற்றுச்சூழல் உணர்திறன் பகுதி வழியாக சாலை அமைக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் ஆகியோர் முன்பு ஜனவரி 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications