யார் வந்தாலும் இளநீர் கொடுக்கும் மலை வாழ் மக்கள்! ஜவ்வாது மலையின் சிறப்புகள் என்னென்ன?
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் பழங்குடியினத்தை சேர்ந்த ஸ்ரீபதி 23 வயதில் உரிமையியல் நீதிபதியான நிலையில் அவர் வசிக்கும் ஜவ்வாது மலையின் சிறப்புகளை தெரிந்து கொள்வோம்.
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையை அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீபதி (23). அவர் டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதி உரிமையியல் நீதிபதிக்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

பழங்குடியின வகுப்பை சேர்ந்த முதல் பெண் நீதிபதி என்ற பெருமையை பெற்றுள்ளார். ஸ்ரீபதி வளர்ந்த ஜவ்வாது மலை குறித்து சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.
இது கிழக்கு தொடர்ச்சி மலையாகும். கொல்லிமலை, சேர்வராயன் மலை, கல்வராயன் மலையை அடுத்து வரும் மலைத் தொடர்தான் ஜவ்வாது மலை. இந்த ஜவ்வாது மலைத் தொடர்கள் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 262 சதுர கி.மீ. பரப்பளவுக்கு 250 கி.மீ. சுற்றளவு கொண்டது.

இந்த மலைத் தொடரில் ஒரு அருவியும் உள்ளது. அது போல் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள காவலூர் டெலஸ்கோப் இங்குள்ள சுற்றுலா தலமாகும். ஆசியாவிலேயே மிகப் பெரிய டெலஸ்கோப் உள்ளது. இந்த டெலஸ்கோப் வழியாக வானை சனிக்கிழமைகளில் காணலாம். இந்த ஜவ்வாது மலை நரவி மலை என்றும் அழைக்கப்படுகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்த நரவி மலை ஜவ்வாது மலை என்ற பெயரை பெற்றது.
இங்கு அமிர்தி அருவி உள்ளது. அது போல் மேற்கு பகுதியில் ஏலகிரி மலையில் ஜலகாம்பாறை அருவியும் சுற்றுலா செல்ல ஏற்ற இடம். இந்த மலையிலிருந்துதான் செய்யாறு, கமண்டல நாகநதி, நாகநதி போன்ற ஆறுகள் உற்பத்தியாகின்றன. இந்த மலையின் அடிவாரத்தில் செண்பகத் தோப்பு அணையும் உள்ளது.
ஜவ்வாது மலையின் மேல் கோமுட்டேரி படகு குழாம் உள்ளது. இந்த மலையில் சாமை, வரகு, தேன், கடுக்காய், தினை போன்றவை விளைகின்றன. இங்கு சந்தன மரங்களும் உள்ளன. பெரும்பாலான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. சில மரங்கள் வனத்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மலைத் தொடரில் உள்ள ஏலகிரி மலை சிறந்த சுற்றுலா தலம் ஆகும். இங்கு படகு சவாரி, பாரா கிளைடிங் போன்றவை நடைபெறும்.
ஜவ்வாது மலையில் ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த மரம் காணப்படுகிறது. இங்குள்ள அத்தியூரில் மேல் சிப்பிலி என்ற மலை கிராமம் உள்ளது. இங்கு மலைகிராம மக்கள் வசிக்கிறார்கள். இங்கு வள்ளிக் கிழங்கு, பலாபழம் உள்ளிட்டவை கிடைக்கும். இங்கு யார் வந்தாலும் இளநீரை கொடுப்பார்களாம் மலைவாழ் மக்கள்.












Click it and Unblock the Notifications