மதுரைன்னா மீனாட்சி அம்மனும், அழகர் கோயிலும்தானா! இந்த இடங்களுக்கும் போய் பாருங்க.. வாவ் டூர் ஸ்பாட்
மதுரை: தமிழ்நாடு மட்டுமல்லாது சர்வதேச அளவில் மதுரை மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும். மீனாட்சி அம்மன் கோயிலும், அழகர் மலையும் சித்திரை திருவிழாவும் இதற்கு முக்கியமான காரணமாகும். இருந்தாலும் கூட மதுரையில் சுற்றி பார்க்க ஏராளமான இடங்கள் இருக்கின்றன. மதுரை போகும்போது நிச்சயம் இந்த இடங்களை தவறாமல் சுற்றி பார்த்துவிடுங்கள்.
மதுரை என்பது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நகரமாகும். ஏறத்தாழ சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மக்கள் இந்த ஊரில் வசித்து வருகிறார்கள். சங்ககாலப் பாண்டியர், இடைக்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், கர்நாடக இராச்சியம், ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆட்சி செய்திருக்கிறார்கள். இந்த ஊரில் மீனாட்சியம்மன் கோயில், அழகர் மலை, நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் கோயில், காந்தி மியூசியம், தெப்பக்குளம் ஆகிய இடங்கள் பேமஸான இடங்களாக இருக்கிறது.

ஆனால் இங்கு அறியப்படாமல் பல இடங்கள் இருக்கின்றன. அந்த பட்டியலில் முதலில் இருப்பது சமணர் மலை. மதுரையிலிருந்து தேனி போகும் வழியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு முன்னரே நாகமலை புதுக்கோட்டை எனும் பகுதியில் இந்த மலை அமைந்திருக்கிறது. சில நூற்றாண்டுக்கு முந்தைய கல்வெட்டுக்கள் மற்றும் கட்டிடங்களையே வியந்து பார்க்கும் நமக்கு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுக்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்?
மதுரையின் சமணர் மலையில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுக்கள், 1700 ஆண்டுகளுக்கு முந்தைய புடைப்பு சிற்பங்கள், சதிலமடைந்த சில கட்டுமானங்களை பார்க்க முடியும். சமண மதம் செழித்து வளர்ந்த காலத்தில் மதுரையை சுற்றி பல்வேறு இடங்களில் சமண முனிவர்கள் தங்கியிருந்தனர். நாகமலை புதுக்கோட்டையை ஒட்டியுள்ள பகுதியிலும் இவர்கள் சமண பள்ளியை உருவாக்கினர். ஆனால் இன்று இந்த பள்ளி ஏதும் இல்லை. சமண மலை தொடக்கத்தில் கீழே ஒரு இந்து கோயில் இருக்கும். இதனை கடந்து மேலே சென்றால் இயற்கை சுனை ஒன்று இருக்கும். அங்கு 9 புடைப்பு சிற்பங்களை காண முடியும்.
அதையும் கடந்து சென்றால் மேலே உச்சியல் சிதிலமைடைந்த சமண பள்ளி இருக்கிறது. இதில் 2300 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள் செதுக்கப்பட்டுள்ளன. அதேபோல மலையின் தென்மேற்கு சரிவில் செட்டிப்பொடவு எனும் குகை ஒன்று இருக்கிறது. இங்கும் சமணர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்கு நீதிமன்றம் ஒன்று இருந்ததாக சொல்லப்படுகிறது. தமிழின் பெருமை குறித்து தெரிந்துகொள்ள விரும்புவோர் நிச்சயம் இந்த இடங்களுக்கு போகலாம்.
அதேபோல யானைமலையும் சமணர் கல்வெட்டுகள் அதிகம் இருக்கும் இடமாகும். சுமார் 400மீ உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இந்த குகை தளத்தில் இரண்டு சமண துறவிகள் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்கி தியானம் மேற்கொண்டிருந்துள்ளனர். இதற்கான கல்வெட்டுகளும் காண கிடைக்கிறது. இது ஒத்தக்கடை எனும் பகுதியில் அமைந்திருக்கிறது. யானை படுத்திருந்தால் எப்படி இருக்குமோ அதேபோல இந்த மலை இருப்பதால் இதற்கு யானை மலை என்று பெயர் வந்துள்ளது.
அதேபோல இந்த மலையின் வடக்கே ஒரு குடைவரை கோயில் அமைந்திருக்கிறது. கி.பி 770ம் ஆண்டில் இந்த கோயில் முற்கால பாண்டிய மன்னனின் அமைச்சராக இருந்த ஒருவரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த கோயிலை முழுமையாக கட்டி முடிப்பதற்கு முன்னரே அவர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து அவரது மகன் இந்த கோயிலை கட்டி முடித்துள்ளார். இக்கோயிலின் மூல தெய்வமாக நரசிங்க பெருமாள் இருக்கிறார். அதேபோல எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த லாடன் எனும் குடைவரை கோயில் ஒன்றும் இந்த யானை மலையில் இருக்கிறது.
சமணர் மலை யானை மலை போன்ற கீழவளவு பஞ்ச பாண்டவர் மலையும் பேமஸானதாகும். மதரை மேலுர் பகுதியில் இந்த கோயில் மலை அமைந்திருக்கிறது. இந்த மலையில் சமணர் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து மலையில் கிராணட் கற்களை வெட்டி எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இங்குள்ள சிற்பங்கள் கி.பி மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இது தவிர கூடல்நகர் அழகர் கோயில், காஜிமார் பெரிய மசூதி, பாண்டி கோயில், செயின்ட் மேரிஸ் கதீட்ரல் கோரிப்பாளையம் தர்கா ஆகியவை சுற்றி பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களாகும்.












Click it and Unblock the Notifications