விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம்.. ஏப்ரல் 1 முதல் ஊட்டி, கொடைக்கானலில் மேஜர் மாற்றம் உறுதி
சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் வருகைக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்தது. இந்த கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1 முதல் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் எத்தனை சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஆய்வுகள் முடிந்து அறிக்கை தாக்கல் செய்ய காலதாமதமாகும் என்பதால் கோடை விடுமுறையின்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக குறிப்பிட்ட எண்ணிக்கையில் சுற்றுலா வாகனங்களை அனுமதிப்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமார், டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மார்ச் 13ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், இந்த விவகாரத்தில் கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பாதிக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் வாதிடும் போது, கொடைக்கானல் மலையில் 50 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை இயக்க தடை விதித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் கடந்த டிசம்பரில் உத்தரவிட்டுள்ளார் என்றும், ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்களை இயக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் ஆய்வுகள் முடிவடைய இன்னும் 9 மாதங்கள் ஆகும் என்றும் கூறினார்.
அதையடுத்து நீதிபதிகள், "ஐஐடி, ஐஐஎம் ஆய்வு முடிவுகள் வரும் வரை எதிர்வரும் கோடை காலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாகவும், சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையிலும் ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கையில் புதிதாக கட்டுப்பாடுகளை விதிக்கிறோம். அதன்படி ஏற்கெனவே உள்ள இ-பாஸ் நடைமுறைப்படி ஊட்டிக்கு வார நாட்களில் தினமும் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களில் தினமும் 8 ஆயிரம் வாகனங்களை அனுமதிக்கலாம்.
அதேபோல கொடைக்கானலுக்கு வார நாட்களில் தினமும் 4 ஆயிரம் வாகனங்களையும், வார இறுதி நாட்களில் தினமும் 6 ஆயிரம் வாகனங்களையும் மட்டுமே அனுமதிக்க வேண்டும். உள்ளூர் வாகனங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அதேபோல அரசு பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலமாக ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் பயணிகளுக்கும் எந்த கட்டுப்பாடும் இல்லை..
சுற்றுலா வாகனங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும். இந்த புதிய கட்டுப்பாடுகளை வரும் ஏப்.1-ம் தேதியில் இருந்து வரும் ஜூன் 30-ம் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும். அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை வரும் ஏப்.25 அன்று தாக்கல் செய்ய வேண்டும்" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்தும், அதற்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்துவிட்டது. முன்னதாக மேல்முறையீடு மனுவை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சூர்யகாந்த், என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எவ்வித தரவுகளுமின்றி, சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு காரணமாக ஓட்டல் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார். வாதத்தை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சுற்றுச்சூழல் அம்சங்களை கருத்தில் கொண்டு வாகன கட்டுப்பாடு உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடும் வகையில் மேல்முறையீடு மனுவை திரும்பப்பெற அனுமதி அளித்து முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications