2 பிளான்.. கொடைக்கானலில் அதிரடி காட்டப்போகும் தமிழக அரசு.. அமைச்சர் எவ வேலு சூப்பர் தகவல்
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மண் சரிவால் ஏற்படும் விபத்தை தடுக்க நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என்றும், கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் தயாரிக்கப்படுவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
கொடைக்கானல், நீலகிரி போன்ற மலைப்பகுதியில் உள்ள சாலைகளில் விடுமுறை நாட்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதிகப்படியான மக்கள் சுற்றுலா செல்வதால், அந்த சாலைகள் அப்படியே ஸ்தம்பித்து விடுகிறது. மலைப்பகுதி என்பதால் சாலைகள் சிறியதாக இருக்கும். வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருந்தே செல்லும் நிலை ஏற்படுகிறது.

இந்நிலையில் கொடைக்கானல், நீலகிரி போன்ற மலைப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்க அரசு புதிய திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக உள்ளது.
இதேபோல் மலைப்பகுதியில் உள்ள சாலைகளில் அடிக்கடி மண் சரிவு ஏற்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அல்லது போக்குவரத்து நெரிசலில் சிக்குவது நடக்கிறது. அதை தடுக்கவும் நவீன தொழில் நுட்பம் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது,.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப்யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் ஆட்சியர் கலெக்டர் பூங்கொடி, எம்.எல்.ஏ.க்கள் இ.பெ.செந்தில்குமார் (பழனி), காந்திராஜன் (வேடசந்தூர்) உள்ளிட்டோரும் இந்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "ரூ.301 கோடி ஒதுக்கப்பட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலை பணிகள் நடந்து வருகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தில் 4 வழிச்சாலையை அகலப்படுத்தும் பணி ரூ.247 கோடியில் நடந்து வருகிறது.
கிராம சாலைகள் திட்டத்தில் 5 ஆண்டுகளில் 10 ஆயிரம் கி.மீ. தூரம் சாலை பணி மேற்கொள்ளப்படுகிறது. முதல்கட்டமாக 2 ஆயிரம் கி.மீ. பணி மேற்கொள்ள திட்டமிட்டு, திண்டுக்கல்லில் 65 கிராமங்களில் ரூ.176 கோடியில் பணிகள் நடந்து வருகிறது. திண்டுக்கல்லில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க நிலம் எடுப்பு பணி நடக்கிறது. அது முடிந்ததும் திட்டம் மதிப்பீடு தயாரித்து பணிகள் தொடங்கும்.

கொடைக்கானல் போக்குவரத்து நெரிசல் : கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசலை தடுக்க சாலைகளை அகலப்படுத்துதல், வாகனங்களை நிறுத்தி அனுப்புதல் மேற்கொள்ள புதிய திட்டம் தயாரிக்க உள்ளோம். அத்துடன் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு ரோப்கார் அமைக்கும் பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதை நிறைவேற்ற மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
மழைக்காலத்தில் கொடைக்கானல், ஊட்டியில் மண் சரிவு ஏற்படுகிறது. இதை தடுக்க ஊட்டியில் 3 இடங்களில் புதிய தொழில்நுட்பத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டது. அதேபோல் கொடைக்கானலில் மண் சரிவை தடுக்க 3 அல்லது 4 இடங்களில் தடுப்புகள் அமைக்கப்படும். அதேபோல் கொடைக்கானலில் கொண்டைஊசி வளைவுகளில் விபத்தை தடுக்க நவீன தொழில்நுட்பத்துடன் ரோலர்பேரிங் சிஸ்டம் பயன்படுத்தப்படும்" இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.












Click it and Unblock the Notifications