ரெட் டாக்ஸிக்கு ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு.. முற்றிய மோதல்.. கொதிக்கும் கோவை
ஊட்டி: கோவையில் இருந்து தினசரி ஏராளமானோர் கால் டாக்ஸி மூலம் ஊட்டிக்கு சுற்றுலா செல்கின்றனர். அப்படி செல்லும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், ஊட்டியில் இருந்து திரும்ப செல்லும் போது பயணிகளை ஏற்றி செல்லவிடாமல் சுற்றுலா ஓட்டுநர்கள் சிலர் மிரட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை மாநகரத்திற்கு மிக அருகில் உள்ள உலக புகழ் பெற்ற சுற்றுலா தலம் ஊட்டி. மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்..

சென்னை, பெங்களூர், ஈரோடு, சேலம், வேலூர், திருப்பூர், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருபவர்கள் நேரடியாக திருப்பூர் மாவட்டம் அவினாசி அல்லது கோவை மாவட்டம் அன்னூர் வழியாக செல்கிறார்கள். வெளியூர்களில் இருந்து நீண்ட தூரம் வருபவர்கள் என்பதால் இவர்கள் கார்களிலேயே வந்து, காரிலேயே சுற்றி பார்த்து செல்வார்கள். அதேநேரம் கோவையில் இருந்து செல்பவர்கள் நேரடியாக முழுமையாக சுற்றிபார்க்க வாடகை வாகனங்களை ஏற்பாடு செய்வது இல்லை.
கோவையில் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி உள்ளிட்ட தனியார் கால் டாக்ஸில் புக்கிங் செய்து ஊட்டி வந்து இறங்குகிறார்கள்.. அதன்பிறகு அங்கு சுற்றுலா செல்கிறார்கள். இப்படி கோவையில் இருந்து ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி உள்ளிட்ட தனியார் கால் டாக்ஸி மூலம் தினசரி ஏராளமானோர் ஊட்டி செல்கிறார்கள்.. அப்படி செல்லும் கால் டாக்ஸி ஓட்டுநர்கள், திரும்ப செல்லும் போது, குறைந்த கட்டணத்தில் கோவைக்கு அல்லது திருப்பூருக்கு பயணிகளை பிக்கப் செய்து செல்வதாக, ஊட்டியில் சுற்றுலா டாக்ஸி டிரைவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இப்படி வெளியூர்களில் இருந்து வரும் வாகனங்களால் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பியுள்ள தங்கள் வாழ்வாதாரம் இதனால் பாதிக்கப்படுவதாக ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகிறார்கள். இது ஒருபுறம் எனில், கோவை மாவட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்களோ ஊட்டிக்கு போய்விட்டு மீண்டும் தனியாக எப்படி வர முடியும் என்றும், அப்படி வந்தால் பாதிப்பு ஏற்படும் என்று கூறுகிறார்கள்.
இதனால் இரு மாவட்ட டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே பிரச்னை நிலவி வருகிறது . இதனிடையே ஊட்டி சுற்றுலா வாகன ஓட்டிகள் சிலர், ஊட்டியில் இருந்து திரும்ப செல்லும் போது பயணிகளை ஏற்றி செல்லவிடாமல் ரெட் டாக்ஸி ஓட்டுநரை மிரட்டியதாகவும், வாகனத்தின் ஸ்டிக்கரை கிழித்து , வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தியதாகவும் புகார் எழுந்தள்ளது. இதனால் கோவை மாநகரில் ரெட் டாக்ஸி, கோ டாக்ஸி ஓட்டுநர்கள் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் இரு மாவட்ட ஆட்சி தலைவர்கள் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications