திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க
திருநெல்வேலி: ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் திமுகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாகவும், தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பணி செய்வதாகவும் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் அறிவித்துள்ளது. இது தென்மாவட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்பிறகு மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதி கட்ட பட்டியல் நாளை வெளியாக உள்ளது.

இந்நிலையில் தான் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் தமிழகத்தில் பிரசாரம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நாம் தமிழர் சீமான், தவெக தலைவர் விஜய் ஆகியோர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
திமுக கூட்டணிக்கு ஆதரவு
மேலும் ஒவ்வொரு கட்சிகளும் பல்வேறு அமைப்புகள், இயக்கங்களிடம் ஆதரவு கோரி வருகின்றனர். இந்நிலையில் தான் திமுகவுக்கு தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. திருநெல்வேலி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரை அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் முத்துவேல் இன்று சந்தித்து நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கடந்த முறையை போல் பணி
இந்த இயக்கம் கடந்த 2021 சட்டசபை தேர்தலிலும் திமுகவுக்கு ஆதரவு வழங்கியது. இப்போது மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளது. கடந்த முறையை போல் இந்த முறையும் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைப்பதாக அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் முத்துவேல் அறிவித்துள்ளார். இது திமுக கூட்டணிக்கு பிளஸ் பாயிண்ட்டாக பார்க்கப்படுகிறது.
தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகள்
திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இந்த மாவட்டங்களில் பல தொகுதிகளில் வேட்பாளர்களின் வெற்றிக்கு இந்த தேவேந்திர குல வேளாளர் மக்களின் ஆதரவு தேவையாக உள்ளது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டபிடாரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிகளவில் தேவேந்திர குல வேளாளர்கள் உள்ளனர். இதுதவிர இன்னும் பல தொகுதகிளில் கணிசமான அளவில் இருக்கின்றனர்.
திமுகவுக்கு ஏன் முக்கியம்?
அதன்படி தேவேந்திர குல வேளாளர் மக்களுக்காக அரசியல் செய்து வரும் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் அதிமுக - பாஜக கூட்டணியில் உள்ளார். அதேவேளையில் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி தனித்து களம் காண்கிறது. யாருடன் கூட்டணி அமைக்கவில்லை. இது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தென்மாவட்டங்களில் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இப்படியான சூழலில் தேவேந்திர குல வேளாளர் எழுச்சி இயக்கம் திமுகவுக்கு ஆதரவு வழங்கி உள்ளது மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications