காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்!
திருநெல்வேலி: என்னதான் தமிழ்நாடு ஒப்பீட்டளவில் முற்போக்கு மாநிலம் என்று சொல்லிக்கொண்டாலும், காதல் திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வகையில், இன்று திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்தக்கொண்டதற்காக தனது மகள் வசிக்கும் வீட்டில் அவரது தந்தை பெட்ரோல் குண்டு வீசியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருநெல்வேலி மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவர் சமையல் கலைஞராக வேலை பார்த்து வருகிறார். ஆள் நல்ல கை பக்குவமானவர். அக்கம் பக்கத்தில் எங்கு விசேஷம் என்றாலும் சமைக்க இவரைதான் அழைப்பார்கள்.

இவருக்கு திவ்யா என்கிற மகள் இருக்கிறார். சமீப நாட்களாக திவ்யாவுக்கு வரன் பார்த்து வந்திருக்கிறார் முருகன். பெரியதாக எங்கும் செட் ஆகவில்லை. வரதட்சணை, சொத்து என மாப்பிள்ளை வீட்டிலிருந்து பெரிய லிஸ்ட் போட.. கல்யாணம் தள்ளி போய் இருக்கிறது. இப்படி இருக்கையில்தான் திவ்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த முத்துக்குமார் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இது நாளடைவில் அப்படியே காதலாக மாறியிருக்கிறது.
ஒருபுறம் திவ்யா வீட்டில் மாப்பிளை பார்க்கும் படலம் தீவிரமாக நடக்க, மறுபுறம் முத்துக்குமாருக்கும்-திவ்யாவுக்கும் இடையே காதல் அதிகரித்திருக்கிறது. இந்த விஷயத்தை திவ்யா தனது வீட்டில் சொல்லி பார்த்திருக்கிறார். ஆனால், அதை தந்தை முருகன் ஏற்றுக்கொள்ளவில்லை. மட்டுமல்லாது தன்னுடைய பேச்சை மீறி ஏதாவது நடந்தால் தொலைத்து விடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.
வீட்டில் கெடுபிடி அதிகமாவதை உணர்ந்த இருவரும், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துக்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த முருகன், மாப்பிள்ளை முத்துக்குமாரின் வீட்டிற்கு சென்று அரிவாளால் கண்ணில் தென்பட்ட பொருட்களை எல்லாம் சேதப்படுத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அவர், முத்துக்குமாரின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டு வீசியிருக்கிறார். இதனால் வீட்டில் உள்ள பொருட்கள் முழுவதும் எரிந்து சாம்பலாகியிருக்கிறது.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் முருகனை பிடித்து உடனடியாக போலீசில் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருக்கும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டிருக்கின்றனர்.
தமிழ் சமூகத்தில் காதல் அவ்வளவு கொண்டாடப்பட்டது. 'யாயும் ஞாயும் யாராகியரோ' என பாட்டெல்லாம் பாடி நம் முன்னோர் லவ் செய்திருக்கிறார்கள். அப்பேற்பட்ட தமிழ் சமூகத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்பது செயற்கைதனமாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கூறுகின்றனர்.
குறிப்பாக தென் மாவட்டங்களில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு வலுப்பதும், இந்த எதிர்ப்பு வன்முறையை நோக்கி செல்வதும், கட்டுப்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications