நெல்லையில் பள்ளி வகுப்பறையில் 2 மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு.. சக மாணவர் செயலால் அதிர்ச்சி
நெல்லை: நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் மாணவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் இரண்டு மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. சக மாணவரே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களாகவே மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரம் தலைதூக்கி வருவது கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே டோனாவூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று வகுப்பறையில் பள்ளி மாணவர்கள் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

முன் விரோதத்தில் அரிவாளை தூக்கிய மாணவன்?
இதில் அந்த 2 மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலையில் பள்ளிக்கு வரும் போது ஒரு மாணவர் பள்ளி புத்தகைப்பைக்குள் சிறிய அரிவாளை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பள்ளி வகுப்பு தொடங்கியதும் தன்னிடம் வம்பு இழுத்த மாணவரை அரிவாளால் அந்த மாணவர் வெட்டியுள்ளார்.
அப்போது இன்னொரு மாணவர் இதனை தடுத்துள்ளார். இதில் அவரையும் இந்த மாணவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் 2 மாணவர்களுக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக இரு மாணவர்களையும் மீட்டு உடனடியாக அருகே உள்ள ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ஏர்வாடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வகுப்பறையில் மாணவர் ஒருவர் சக மாணவர்களை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
போலீசார் அறிவிப்பு
ஏர்வாடி காவல் நிலைய சரகத்தில், டோனாவூரில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையில் நேற்று வகுப்பறையில் ஏற்பட்ட வாய் தகராறின் தொடர்ச்சியாக, இன்று காலை ஒரு மாணவன் அரிவாளால் மற்றொரு மாணவனை முதுகில் தாக்கிய சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க முயன்ற அருகில் இருந்த தாக்குதல் நடத்திய மாணவனின் சமூகத்தைச் சார்ந்த மற்றொரு மாணவருக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்று, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் இரண்டு மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தனிப்பட்ட வாக்குவாதத்தின் தொடர்ச்சியாக நிகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தை "பள்ளியில் கொடூர தாக்குதல்", "இரு சமூகங்களுக்கு இடையேயான பெரிய சம்பவம் அல்லது மோதல்" என்று மிகைப்படுத்தி, சமூக வலைத்தளங்கள் மற்றும் சில செய்தி சேனல்களில் வெளியிடப்படுவது முற்றிலும் தவறானது. இப்படியான மிகைப்படுத்தப்பட்ட செய்திகள் பொது மக்களிடையே தேவையற்ற பீதியினை ஏற்படுத்துகின்றன. எனவே, நடந்த சம்பவத்தை, மிகைப்படுத்தாமல், சமூகப் பொறுப்புடன் சம்பவம் குறித்த செய்திகளை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சமீபத்தில் நெல்லையில் நடந்த சம்பவங்கள்
நெல்லை மாவட்டத்தில் சமீப நாட்களாகவே பள்ளி மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாச்சாரம் ஓங்கி வருகிறது. இதனை வேரோடு ஒழிப்பதற்கு கல்வித்துறை மற்றும் காவல்துறையினர் மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தபோதிலும் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்தபாடில்லை.. நெல்லையில் கடந்த சில நாட்களில் நடந்த சம்பவங்களை இங்கு பார்க்கலாம்.
மாணவர், ஆசிரியைக்கு அரிவாள் வெட்டு
கடந்த ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி: நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் இருவருக்கு இடையே பென்சில் பயன்படுத்துவதில் ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவர் சக மாணவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அந்த மாணவரை தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் அப்போது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
8 ஆம் வகுப்பு படித்து வரும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் இடையே இந்த மோதல் ஏற்பட்டு இருந்தது.
அரிவாளை தூக்கிய 10-ம் வகுப்பு மாணவர்கள்
கடந்த ஆகஸ்டு மாதம் 6 ஆம் தேதி: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே தன் அக்காவை காதலித்த மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவரை, 10 ஆம் வகுப்பு மாணவர் தன் சக மாணவர்கள் 4 பேர் உதவியுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிய சம்பவமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் 5 பேரையும் கைது செய்த போலீசார், சேரன்மகாதேவி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
நெல்லை நாங்குநேரி சின்னத்துரை
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி: நெல்லை மாவட்டம் நாங்குநேரியை சேர்ந்த கூலித் தொழிலாளி முனியாண்டி என்பவரின் மகன் சின்னதுரை. கடந்த 2023-ம் ஆண்டு அரசு பள்ளியில் படித்தபோது, அதே பள்ளியில் படித்து வந்த வேறு சமுதாய மாணவர்கள் சிலர் சின்னதுரையை அவரது வீட்டிற்கு சென்று அரிவாளால் வெட்டினர். இதை தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கை மீதும் அந்த கும்பல் தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவமும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
வீடு புகுந்து அரிவாளால் வெட்டினர்
கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 ஆம் தேதி, நெல்லை மாவட்டம், மேலப்பாட்டம் கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகன் மனோஜ்குமார் மீது வேறு சமூகத்தை சேர்ந்த கும்பல் வீடு புகுந்து அரிவாள், பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்ற காரணத்தால் வாய் தகராறில் வந்த பிரச்சினைக்கு வீட்டிற்குள் புகுந்து புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டி, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மனோஜ்குமார், திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications