சசிகலாவிற்கு பெரிய சமூக பின்னணி உள்ளது.. அவர் மட்டும் பாஜக வந்தால்.. மீண்டும் அடித்து சொன்ன நயினார்
திருநெல்வேலி: சசிகலா எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும், அவருக்கு குறிப்பிட்ட சமுதாய பின்னணி உள்ளது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மீண்டும் சசிகலாவை ஆதரித்து பேசி உள்ளார்.
சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது தவறு இல்லை என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் சசிகலாவிற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. முன்பு சசிகலாவிற்கு ஆதரவாக பேசி வந்த பலர் தற்போது மௌனம் ஆகி உள்ளனர்.
சசிகலாவும் அதிமுகவை எப்படி மீட்பது.. மீண்டும் எப்படி லைம் லைட்டிற்கு வருவது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்.

நயினார் நாகேந்திரன்
இந்த நிலையில், நெல்லை சட்டமன்ற தொகுதி பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் இன்று புதுக்கோட்டையில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது சசிகலாவை ஆதரித்து கருத்து தெரிவித்தார். அதில், சசிகலா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம். அவர் வந்தால் பாஜகவின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அரசியல் வட்டாரத்தில் இந்த கருத்து சலசலப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்ற முயல்வார்
அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற சசிகலா முயன்று வருகிறார். டெல்லி பாஜக மூலம் அவர் அதிமுகவில் நுழைய முயற்சிகளை எடுக்கலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன. சமீபத்தில் கூட பாஜக நிர்வாகி விஜயசாந்தியை சசிகலா மீண்டும் சந்தித்தது இந்த சந்தேகத்தை அதிகரித்தது. இது போன்ற சூழ்நிலையில் சசிகலாவை பாஜகவுடன் இணைத்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட கருத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலையிடம் நயினாரின் இந்த கருத்து பற்றி இன்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, சசிகலா பாஜகவில் இணைவது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியது அவரது தனிப்பட்ட கருத்து. கட்சியின் கருத்து அல்ல என்று அண்ணாமலை தெரிவித்தார. இந்த நிலையில், அண்ணாமலைக்கு பதிலளிக்கும் வகையில் சசிகலா பாஜகவில் மட்டுமல்ல எந்த கட்சியில் இணைந்தாலும் அந்த கட்சி வலுவடையும் என்று மீண்டும் நயினார் நாகேந்திரன் இன்று பேசி இருக்கிறார்.

சமுதாயம்
இதுகுறித்து நெல்லையில் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சசிகலா பாஜகவில் இணைந்தால் பாஜக வலுவாக இருக்கும். இது பாஜகவின் கருத்தல்ல. எனது தனிப்பட்ட கருத்து.
சசிகலா எந்தக் கட்சிக்கு சென்றாலும் அந்த கட்சி வலுவாக இருக்கும். அவருக்கென ஒரு சமுதாய பின்னணி உள்ளது. ஜெயலலிதாவுடன் பலகாலம் பொதுவாழ்க்கையில் இருந்திருக்கிறார். அவருக்கென்று ஒரு செல்வாக்கு இருக்கிறது. நிச்சயமாக சசிகலாவின் வருகை எந்த கட்சிக்கு வந்தாலும் அது வலுவாக இருக்கும் என்று மீண்டும் நயினார் அழுத்தம் திருத்தமாக கூறினார்












Click it and Unblock the Notifications