மதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணனின் நண்பர்! துரை வைகோ அழைப்பு! வைகோ வரவேற்பு!
தென்காசி: மதுரையில் டாக்டர் சரவணனின் நிழல் போல் அவரோடு வலம் வந்த கரு.சுந்தர் வைகோ முன்னிலையில் இன்று மதிமுகவில் இணைந்திருக்கிறார்.
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள வைகோ இல்லத்துக்கு சென்ற கரு.சுந்தரை துரை வைகோ தனது தந்தையிடம் அறிமுகம் செய்திருக்கிறார்.
கரு.சுந்தர் ஏற்கனவே மதிமுகவில் மாநில அளவில் தொண்டர் அணி நிர்வாகியாக இருந்த காரணத்தால் அவரை எளிதில் அடையாளம் கண்டுகொண்ட வைகோ, ''இவர் ரொம்ப பாசமானவர்'' என எல்லோர் முன்னிலையிலும் புகழ்ந்து கரு.சுந்தரை வரவேற்றிருக்கிறார்.

மேலும், பழைய நிகழ்வுகள் சிலவற்றையும் சுட்டிக்காட்டி வைகோ நினைவு கூர்ந்துள்ளார். தனது மகன் துரை வைகோவுக்கு பக்கபலமாக புதிது புதிதாக மதிமுகவில் இணைபவர்களால் வைகோ சற்று உற்சாகமுடன் காணப்படுகிறார்.
கரு.சுந்தருக்கு விரைவில் மாநில அளவில் மதிமுகவில் ஒரு பதவி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. டாக்டர் சரவணன் அதிமுகவில் இணைந்த பிறகு அரசியலே வேண்டாம் என்று இருந்த கரு.சுந்தரை துரை வைகோ தான் பக்காவாக ஸ்கெட்ச் போட்டு மதிமுகவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

திமுக, அதிமுக என ஆளும் கட்சி ஆண்ட கட்சிகளில் இணைவதற்கு பலரும் ஆர்வம் காட்டினாலும், கொள்கை காரணமாக மதிமுகவில் இணைபவர்களின் எண்ணிக்கையும் மெல்ல உயர்ந்து வருகிறது.
தென் மாவட்டங்களின் நுழைவுவாயிலாகவும் தலைநகராகவும் விளங்கும் மதுரையில் இன்னும் பல புது முகங்களை மதிமுகவுக்கு அழைத்து வருவதற்கான பணிகளில் துரை வைகோ ஈடுபட்டுள்ளார்.
மதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தும் திட்டத்தில் உள்ள துரை வைகோ தொடர்ந்து சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications