மீண்டும் மீண்டுமா? விஜய் பரப்புரையில் தொடரும் விதிமீறல்கள்.. நெல்லையில் மட்டும் 5 விபத்துகள்
நெல்லை: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நெல்லையில் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் அப்பகுதிகளில் திறந்த வாகனத்தில் ரோடு ஷோவும் சென்றார். இதில் அவரது வாகனத்தை பின் தொடர்ந்து வந்தபோது மட்டும் 5 இடங்களில் விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. இதில் 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விஜய் பொதுக்கூட்டம், பிரச்சார பரப்புரைக்கு செல்லும் போது எல்லாம் அவரது வாகனத்தை பின் தொடர்வது, வாகனத்தின் மீது ஏறி கூச்சலிடுவது, மரத்தின் மீது ஏறுவது போன்ற சம்பவங்கள் இன்னும் தொடர்கின்றன.

நெல்லை வந்த விஜய்
விஜய் மற்றும் கட்சித் தலைமை கேட்டுக்கொண்ட பிறகும் அவரது வாகனத்தை தவெக கட்சியினர் தொடர்வது நடந்தேறி வருகிறது. விஜய் பேச்சை அவரது தொண்டர்களே மதிப்பதில்லை என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. அப்படித்தான் இன்று ஒரே நாளில் 5 இடங்களில் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில் மொத்தம் 16 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தழிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று நெல்லை மற்றும் தூத்துக்குடிக்கு வருகை தந்தார். சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்ட விஜய் தூத்துக்குடி விமான நிலையம் வருகை தந்தார்.
பின் தொடர்ந்த ரசிகர்கள்
பின்னர் அங்கிருந்து நெல்லைக்கு பிரசார வாகனத்தில் புறப்பட்டார். தூத்துக்குடி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வாகனத்தில் நெல்லைக்கு வந்து கொண்டிருந்தபோது அவரது வாகனத்தை பின் தொடர்ந்தபடி தவெக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
விஜய் வாகனத்தை பின்தொடர்ந்து நூற்றுக்கணக்கான தொண்டர்கள், ரசிகர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அப்போது ஒரு சில தொண்டர்களின் மோட்டார் சைக்கிள்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக காயமடைந்த தொண்டர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
16 பேர் படுகாயம்
இதே போன்று நெல்லை வண்ணாரப்பேட்டை அருகே விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து வந்த தொண்டர் ஒருவர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சுக்கு அடியில் சிக்கிய அந்த வாலிபர் படுகாயமடைந்தார். அவரை உடனடியாக போலீசார் மீது மருத்துவமனையில் அனுமதித்தனர். இவ்வாறு இன்று ஒரே நாளில் மட்டும் விஜய் வாகனத்தை பின் தொடர்ந்து சென்று 5 இடங்களில் விபத்துக்கள் நடந்தன. இதில் படுகாயமடைந்த 16 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications