ஊட்டிக்கு கிளம்பிட்டு இ-பாஸ் அப்ளை பண்ணாலே போதும்.. 2 நிமிடத்தில் கிடைக்கும்.. தலைமை செயலர் விளக்கம்
நீலகிரி: ஊட்டிக்கு சுற்றுலா வரும் மக்களிடையே இ- பாஸ் அச்சம் தேவையில்லை, விண்ணப்பித்த 2 நிமிடங்களிலேயே இ-பாஸ் கிடைக்கும் என தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு தற்போது விடுமுறை என்பதாலும், கோடை வெயில் காரணமாகவும் நீலகிரி மாவட்டம் ஊட்டி, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ஆகிய ஆகிய சுற்றுலா தளங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மே 7ஆம் தேதி முதல், ஊட்டி, கொடைக்கானலுக்கு வாகனங்களில் வர இ - பாஸ் கட்டாயம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த மே 7ஆம் தேதி முதல், ஊட்டி, கொடைக்கானலுக்கு வர இ-பாஸ் கட்டாயம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், ஊட்டி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறைக்கு வியாபாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்துள்ளது.
நீலகிரிக்கு சுற்றுலா செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இ-பாஸ் உள்ளதா என்பதை கண்காணிக்க நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலான மேட்டுப்பாளையம் கல்லார் பகுதியில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு, சோதனை செய்த பின்பே நீலகிரிக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதகை செல்ல மேட்டுப்பாளையம் வந்த தமிழக அரசின் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, கல்லார் பகுதியில் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை இன்று நேரில் ஆய்வு செய்தார்.
சுற்றுலா பயணங்களுக்கு எளிதில் இ-பாஸ் கிடைக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்தும், வாகன நெரிசல் எந்த அளவுக்கு உள்ளது என்பது குறித்து அவர் ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, “இந்த ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ள இ-பாஸ் நடைமுறையை சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித தாமதமும் இன்றி எளிமையாக கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
திடீரென சுற்றுலா செல்ல திட்டமிடுபவர்கள் கூட எளிதில் இந்த இ-பாஸை பதிவு செய்யும் அளவுக்கு ஆன்லைன் மூலம் இ-பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தியுள்ளோம். வீட்டில் இருந்து ஊட்டிக்கு புறப்படும்போது கூட செல்போனில் இ-பாஸ் கோரி பதிவு செய்தால் 2 நிமிடத்தில் இ-பாஸ் வழங்கப்படும்.
இ-பாஸ் நடைமுறைக்கு நீலகிரி மாவட்ட வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவிப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "இ பாஸ் நடைமுறையை எளிமைப்படுத்தி உள்ளோம். இதற்காக யாரிடமும் அப்ரூவல் பெற வேண்டியதில்லை. சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தாலே உடனடியாக அவர்களுக்கு இ-பாஸ் கிடைக்கும். எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லை.
இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறையாது. எனவே இ-பாஸ் தொடர்பான அச்சம் தேவையில்லை. துவக்க காலத்தில் வியாபாரிகள் அடைந்த அச்சம் தற்போது விலகியுள்ளது. கோடை காலத்தில் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கையை கணக்கிடவே இந்த நடைமுறை செயல்படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications